பக்கம் எண் :

பக்கம் எண்:674

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
          காண்க வென்றலுங் கணங்குழை மாதரும்
          அரியார் தடங்க ணவந்திகை யவன்றனக்
          குயிரேர் கிழத்தி யாகலி னுள்ளகத்
  15      தழிதல் செல்லாண் மொழியெதிர் விரும்பிப்
          பல்வகை யணிகளு ணல்லவை கொண்டு
          தோழிய ரெல்லாஞ் சூழ்வன ரேந்தச்
          சூடுறு கிண்கிணி பாடுபெயர்ந் தரற்றக்
          காவல னீக்க நோக்கி வந்து
 
             (பதுமாபதி வாசவதத்தையைக் காணல்)
                 12 - 19 : கணங்குழை..........வந்து
 
(பொழிப்புரை) வட்டமான குழையணிந்த அப் பதுமாபதி நங்கை தானும் செவ்வரி யோடிய பெரிய கண்களையுடைய அவந்திகை தன் கொழுநனுக்கு உயிர்போன்ற உரிமையுடையோள் ஆகலானும், கணவனுவப்பது தானும் உவத்தல் கடமையேயாகலானும், இக் கட்டளை கேட்டுத் தன்னெஞ்சிலே சிறிதும் வெறுப்பிலளாய் அம் மொழியை விரும்பி ஏற்றுக்கொண்டு வாசவதத்தைக்குக் கையுறையாகச் சிறந்தனவாகிய பல்வேறு அணிகலன்களையும் ஏந்தித் தோழிமார் தன்னைச் சூழ்ந்து வாரா நிற்பவும், தன் சேவடியிலணிந்த கிண்கிணி அடியிடுந்தோறும் இடம் பெயர்ந்து முரலாநிற்பவும், உதயணன் இல்லாத செவ்வி தேர்ந்து வாசவதத்தையின் மாளிகை முன்றிலிலே வந்து என்க.
 
(விளக்கம்)  "அவந்திகை தன் கணவனுக்கு உயிரேர் கிழத்தியாகலின் உள்ளகத்தழிதல் செல்லாள்" என்னுமிதனோடு, "மாற்றமஃதுரை செய மங்கையுள்ளமும், ஆற்றல்சால் கோசலை அறிவு மொத்தவால், வேற்றுமை யுற்றிலள் வீரன்றாதைபுக் கேற்றவ ளிருதயத் திருக்க வேகொலாம் எனவரும் கம்பநாடர் வாக்கினையும் (மந்தரைசூழ்ச்-51.) கருதுக.அழிதல் செல்லாள் : ஒருசொல். நல்லவை கையுறையாகக் கொண்டு என்க. சூடுறும் - அணியும். பாடு - இடம். காவலன் : உதயணன். வாசவதத்தை முன்றிலின்கண் வந்து என்க.