பக்கம் எண் :

பக்கம் எண்:676

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
             
  25         இன்பஞ் சிறந்த பின்றை யிருவரும்
             விரித்தரி தியற்றிய வெண்கா லமளிப்
             பழிப்பில் பள்ளி பலர்தொழ வேறித்
             திருவிரண் டொருமலர் சேர்ந்தவ ணுறையும்
             பொருவரு முருவம் பொற்பத் தோன்றி
 
                   (இதுவுமது)
             25 - 29 : இருவரும்........தோன்றி
 
(பொழிப்புரை) அவ்விருவரும் அருமை தோன்ற விரித்துச் செய்யப்பட்ட யானை மருப்பினாலியன்ற வெள்ளிய காலையுடைய கட்டிலையுடைய குற்றமற்ற படுக்கையின்கண் தோழிமார் பலரும் கைதொழுது வணங்க ஏறி இரண்டு திருமகளிர் ஒரு செந்தாமரை மலரின்கண் சேர்ந்து உறையுமாப்போலே தம் ஒப்பற்ற உருவம் பொலிவுறத் தோன்றி என்க.
 
(விளக்கம்) இருவரும் : வாசவதத்தையும் பதுமாபதியும். வெண்கால் - யானை மருப்பினாலியன்ற கால். திரு - திருமகள். மலர் - செந்தாமரை மலர். இஃது இல்பொருள் உவமை. இப் பகுதியில் 30 ஆம் எண்ணில் நிற்க வேண்டிய அடி அழிந்தொழிந்தது. பொற்ப - பொலிய.