பக்கம் எண் :

பக்கம் எண்:677

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
            
  30      பேரத் தாணியுட் பெரியோர் கேட்ப
          ஒன்னார்க் கடந்த யூகியை நோக்கி
          வென்வே லுதயணன் விதியுளி வினவும்
          முன்னா னெய்திய முழுச்சிறைப் பள்ளியுள்
          இன்னா வெந்துய ரென்க ணீக்கிய
  35      பின்னாட் பெயர்த்துநின் னிறுதியும் பிறைநுதற்
          றேவியைத் தீயினுண் மாயையின் மறைத்ததும்
          ஆய காரண மறியக் கூறெனக்
          கொற்றவன் கூற மற்றவ னுரைக்கும்
 
              (உதயணன் யூகியை வினவுதல்)
             30 - 38 : பேரத்தாணி.........உரைக்கும்
 
(பொழிப்புரை) உதயணன் பேரத்தாணியின்கண் பெரியோர் அவை நடுவின்கண் அரசு வீற்றிருக்கும்பொழுது அச்சான்றோர் கேட்கும்படி பகைவென்று கடந்த யூகியை நோக்கி முறைப்படி வினவுவான் "அமைச்சனே ! முன்னர் யான் உஞ்சை மாநகரத்தின்கண் பிரச்சோதன மன்னனுடைய பெரிய சிறைக்கோட்டத்தினூடே கிடந்து உழன்ற பெரிய என்னுடைய துன்பத்தை நீ போக்கிய பின்னர் மீண்டும் நீ இறந்துபோனதாக நடித்த நினது பொய்ச் சாவிற்கும், பிறைபோன்ற நுதலையுடைய வாசவதத்தையை நீ வஞ்சகமாகத் தீயிலகப்பட்டு இறந்தாள்போல எனக்குக் காட்டி இதுகாறும் மறைத்து வைத்தமைக்கும் உண்டாய காரணங்களை யான் தெரிந்துகொள்ளும்படி கூறுக !" என்று அக் கொற்றவன் வினவாநிற்ப அதுகேட்ட யூகி உதயணனுக்குக் கூறுவான்; என்க.
 
(விளக்கம்) அத்தாணி - அரசிருத்தற்குரிய மண்டபம். ஒன்னார் - பகைவர். வென்வேல் - வென்றியையுடைய வேல். விதியுளி - முறைப்படி. முழுச்சிறை - பெரிய சிறைக்கோட்டம். நின்இறுதி - நின்சாக்காடு. தேவி : வாசவதத்தை. மாயை - வஞ்சம். கொற்றவன் - உதயணன். மற்றவன் : யூகி. உரைக்கும் - உரைப்பான்.