பக்கம் எண் :

பக்கம் எண்:681

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
         கொடைத்தகு குமரரைக் கூட்டினே னிசையக்
         கொடித்தலை மூதெயில் கொள்வது வலித்தனென்
  65     மற்றவை யெல்லா மற்ற மின்றிப்
         பொய்ப்பொருள் பொருந்தக் கூறினு மப்பொருள்
         தெய்வ வுணர்விற் றெரிந்துமா றுரையா
         தைய நீங்கியெம் மறிவுமதித் தொழுகிய
         பெருமட மகடூஉப் பெருந்தகை மாதால்
  70     நின்னினு நின்மாட்டுப் பின்னிய காதற்
         றுன்னிய கற்பிற் றேவி தன்னினும்
         எண்ணிய வெல்லாந் திண்ணிய வாயின
 
                     (இதுவுமது)
              63 - 72 : கொடை.............ஆயின
 
(பொழிப்புரை) "வேந்தே ! நின்பால் கொடுக்கத்தகுந்த நின் தம்பிமாரை நின்னொடு வந்து கூடும்படி கூட்டினேன். இச்செயலெல்லாம் யான் நீ இக்கொடிக் கோசம்பியின் பழைய மதிலைப் பகைவனிடத்திருந்து கைப்பற்றிக் கொள்ளுவதனையே கருதிச் செய்தனவாம். இக்காரியமெல்லாம் சோர்வின்றி நிறைவேறின ; யான் ஆள்வினை கருதிப் பொய்யையே பொருந்துமாறு கூறுமிடத்தும் அப்பொருளைத் தனது தெய்வத்தன்மையுடைய உணர்ச்சியினாலே அறிந்துகொண்டு எனக்கு முரணாக ஏதுங்கூறாமல் தானும் ஐயம் விடுத்து என் அறிவினையே நன்கு மதித்து யான் கூறிய நெறியிலே நின்று ஒழுகிய பெரிய மடத்தையுடைய மகளாகிய சாங்கியத் தாயாலேயே யான் நின்பொருட்டும் நின்னிடத்தே பின்னிய காதலையும் செறிந்த கற்பினையும் உடைய அத்தேவிபொருட்டும் நினைத்த எல்லாம் உறுதியாக நிறைவேறின"; என்க.
 
(விளக்கம்) மற்றவை - மேலே கூறப்பட்ட செயல்கள். அற்றம் - சோர்வு. தெய்வவுணர்வு - காமவெகுளி மயக்கமற்ற உணர்வு. பெருந்தகைமாது என்றது சாங்கியத்தாயை. நின்னினும் - நின்பொருட்டும், தேவிதன்னினும் - தேவிபொருட்டும்.