பக்கம் எண் :

பக்கம் எண்:683

உரை
 
4. வத்தவ காண்டம்
 
8. தேவியைத் தெருட்டியது
 
                
  80         வழுக்கிய தலைமையை யிழுக்க மின்றி
             அமைத்தனை நீயென வவையது நடுவண்
             ஆற்றுளிக் கூற வத்துணை யாயினும்
             வேற்றுமைப் படுமது வேண்டா வொழிகென
             உயிரொன் றாதல் செயிரறக் கூறி
 
                    (உதயணன் கூற்று)
                80 - 84 : வழுக்கிய..........கூறி
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் அப்பேரவையின் நடுவே தன் மகிழ்ச்சி மிகுதியால் யூகியை நோக்கி "அமைச்சனே ! யான் தவறுசெய்து இழந்துவிட்ட அரசுரிமையை நீ மீண்டும் குறைசிறிதுமின்றி அமைத்துத் தந்தனை" என்று அவ்வவை நடுவே முறையே கூறாநிற்ப : அதுகேட்ட அமைச்சன் அவ்வளவேனும் நின்னால் கூறப்படும் முகமனுரையால் நம் பண்பு வேற்றுமைப்படும். ஆதலின் அச்செயல் வேண்டா ஒழிக ! என்று கூறித் தாம் இருவேறுடம்புடையர் ஆயினும் இருவர்க்கும் உயிர் ஒன்றேயாதலைக் குற்றமறக் கூறி அளவளாவி; என்க.
 
(விளக்கம்) நான் நீ என்னும் சொற்களே நம்மை வேற்றுமைப்படுத்துகின்றன. உடலால் நீயும் நானுமாக வேற்றுமைப்பட்டிருப்பினும் உயிரால் நோக்குமிடத்து யாம் ஒருவரே என்பது கருத்து.