பக்கம் எண் :

பக்கம் எண்:691

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
          பன்னூ றாயிரம் பழுதின்று வருவன
          மன்னூர் வேண்டுவ மற்றவற் கீத்துக்
          குதிரையுந் தேருங் கொலைமருப் பியானையும்
          எதிரிய சிறப்போ டெனைப்பல நல்கிப்
    15     பண்பார் சாயற் பதுமா பதிதன்
          கண்போ றோழி காண்டகு காரிகை
          இயைந்த வேற்க ணிராசனை யென்னும்
          வயங்கிழை மாதரொடு வதுவை கூட்டிப்
          பெருங்கடிச் சிறப்பும் பெயர்த்தொருங் கருளி
 
                   (இதுவுமது)
              11 - 19 : பன்னூறு.........அருளி
 
(பொழிப்புரை) பின்னரும் ஆண்டொன்றில் பன்னூறாயிரம் பொன்கள் குறைவின்றி வருவாய் வருவனவாகிய நிலைபெற்ற ஊர்களையும், அவற்றிற்கு வேண்டுவனவற்றையும் அவ்வுருமண்ணுவாவிற்கு  வழங்கிக் குதிரையும் தேரும் கொலை செய்யும் இயல்புடைய மருப்பினையுடைய யானையும் பிறவுமாகிய அவன் தகுதிக்கேற்ற சிறப்போடு ஏனைய பல பொருள்களையும் வழங்கிப் பண்புமிக்க சாயலையுடையவளும் பதுமாபதிக்குக் கண்போன்ற தோழியும் விரும்பிக் காணத் தகுந்த அழகுடையவளும் வேல்போன்ற கண்ணையுடையவளும் இராசனை என்னும் பெயரையுடையாளும் விளங்காநின்ற அணிகலன்களை யுடையவளும் ஆகிய கன்னியினை அவ்வமைச்சனுக்குத் திருமணம் புணர்வித்துப் பெரிய அத்திருமண வரிசைகளும் மீண்டும் ஒருங்கே வழங்கி; என்க.
 
(விளக்கம்) பன்னூறாயிரம் பொன் என்க. மன்னூரும், வேண்டுபவும் என்க. மற்றவற்கு : உருமண்ணுவாவிற்கு. எதிரிய - ஏற்ற. காரிகை - அழகு. வதுவை - திருமணம். கடிச் சிறப்பு - மணச் சிறப்பு.