பக்கம் எண் :

பக்கம் எண்:698

உரை
 
4. வத்தவ காண்டம்
 
9. விருத்தி வகுத்தது
 
         
    50    மகதத் துழந்த மாந்தர்க் கெல்லாம்
          தகுநல் விருத்தி தான்பாற் படுத்துத்
          தத்த மூர்வயிற் சென்றுவரப் போக்கி
          ஆய்ந்த சிறப்பி னாதித்திய தருமற்
          கோங்கிய சிறப்பி னோரூர் நல்கி
    55    அத்தறு வாயி லாருயிர் வழங்கிய
          சத்திய காயன் மக்களைக் கூஉய்த்
          தந்நிலைக் கெல்லாந் தலைமை யியற்றித்
 
                  (இதுவுமது)
            50 - 57: மகதத்து........இயற்றி
 
(பொழிப்புரை) பின்னரும் தான் மகதநாட்டிற்குச் சென்றுழித் தன்னோடு வாணிகர் வடிவாய் வந்து வருந்திய மறவர்கட்கெல்லாம் அவரவர் தகுதிக்கேற்ற சீவிதப்பொருள்களைத் தானே கூறுபடுத்திக் கொடுத்து அவரவர் ஊர்க்குச் சென்று தான் வேண்டும்போது வருமாறு பணித்துச் செலுத்தி ஆராய்ந்த சிறப்பினையுடைய ''ஆதித்திய தருமன்'' என்னும் சிறந்த மறவனுக்கு உயர்ந்த சிறப்பினையுடைய ஓர் ஊரை விருத்தியாக வழங்கி இன்னும் ஆருணியோடு போர் நிகழ்ந்துழி அப் போர்க்களத்தின்கண் உயிர் வழங்கிய சத்திய காயன் என்னும் மறவன் மக்களை அழைத்து அவர்தம் மறவர் கூட்டத்திற்கெல்லாம் தலைமை வழங்கி; என்க.
 
(விளக்கம்) மகதத்துழந்த மாந்தர் - மகத நாட்டுக்குத் தன்னோடு வாணிகர் வடிவாய் வந்து உதவிசெய்த மறவர் முதலியோர். ஆதித்திய தருமன் : ஒரு சிறந்த மறவன். தருவாய் - செவ்வி. களத்தின்கண் உயிர் வழங்கிய சத்தியகாயன் என்க. கூஉய் - அழைத்து.