பக்கம் எண் :

பக்கம் எண்:70

உரை
 
3. மகத காண்டம்
 
5. மண்ணூநீராட்டியது
 
         
     
           
     80    வண்ண மகளிர் வழிநின் றேத்திச்
           செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை
           மென்மெல விடுகெனப் பன்முறை பணிய
           ஒண்செங் காந்தட் கொழுமுகை யுடற்றிப்
           பண்கெழு தெரிவிர லங்கை சிவப்ப
     85    மயிலெருத் தணிமுடி மாதர்த் தோழி
           கயிலெருத் தசைத்த கைய ளாகித்
           தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை
           ஊழுறு நறும்போ தொருகையிற் பிடித்து
           விண்ணக மருங்கின் வேமா னியர்மகள்
     90    மண்ணகத் திழிதர மனம்பிறழ்ந் தாங்குக்
           கன்னிக் கடிநகர்ப் பொன்னிலத் தொதுங்கி
           விடுகதிர் மின்னென விளங்குமணி யிமைப்ப
           இடுமணன் முற்றத்து மெல்லென விழிதர
 
        (பதுமாபதி வண்டியேற வருதல்)
          80 - 93 ; வண்ண.........இழிதர
 
(பொழிப்புரை) பணிமகளிர் வழியிலே நின்று வாழ்த்திப்
  பரவிச் சிவந்த அணிகலன்களையுடைய கோமகளே! நினது அழகிய
  சிவந்த திருவடியினை மெல்ல மெல்ல வைத்தருள்க என்று பலகாலும்
  போற்றிக் கூறி வணங்கா நிற்ப, ஒள்ளிய செங்காந்தளினது வளவிய
  அரும்பை வென்று பண்பயின்ற ஆராய்ந்து காண்டற்குரிய விரலையுடைய
  அழகிய தன்கை சிவக்கும்படி மயிலின் கழுத்தின் நிறம்போன்ற
  நிறமுடைய அழகிய கூந்தலையும் அன்பையுமுடைய தோழியினது
  அணிகலன்களின் பொருத்து வாயையுடைய பிடரின்கண் இட்ட ஒரு
  கையையுடையவளாய் மற்றொரு கையில் தாழியில் வைத்து
  வளர்க்கப்பட்டு மலர்ந்த குளிர்ந்த செங்குவளையின்கண் ஊழ்த்த
  நறிய மலரினைப் பிடித்து, விண்ணுலகத்திலுறையும் வேமானியர்
  மகள் ! ஒருத்தி தன் மனந்திரிந்து இந்நிலவுலகத்தே வாழ்தற்கு
  வந்தாற்போலக் காவலையுடைய கன்னிமாடத்தினது
  பொன்றளமிட்ட தரையினின்று ஒளிவீசும் மின்னல்போன்று விள்காநின்ற
  அணிகலன்கள் சுடரக் கொணர்ந்து பரப்பிய புதுமணலையுடைய
  முன்றிலிலே மெல்ல இறங்கி வாராநிற்ப என்க.
 
(விளக்கம்) சேயிழை - விளி. பண் - யாழ் குழல்
  முதலியவற்றிலெழும் பண். கெழு - பயின்ற. தெரிவிரல்; வினைத்தொகை.
  பலரும் ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான விரல் என்க.
  கயில் - அணிகலன்களின் பொருத்துவாய்; பிடருமாம். ஊழுறு
  நறுமலர் - ஊழ்த்தலுற்ற நறியமலர். வேமானியர் -தேவருள் ஒருவகையினர்.
  இவர்கள் விமானத்திலே செல்லுதலாலே இப்பெயருடையராயினர். கடிக்கன்னி
  நகர் என்க. இடுமணல்- கொணர்ந்திட்ட மணல்,