பக்கம் எண் :

பக்கம் எண்:702

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          ஒருங்குநன் கியைந்தவ ருறைவுழி யொருநாள்
          திருந்துநிலைப் புதவிற் பெருங்கத வணிந்த
          வாயில் காவலன் வந்தடி வணங்கி
          ஆய்கழற் காலோ யருளிக் கேண்மதி
     5    உயர்மதி லணிந்த வுஞ்சையம் பெருநகர்ப்
          பெயர்வில் வென்றிப் பிரச்சோ தனனெனும்
          கொற்ற வேந்தன் றூதுவர் வந்துநம்
          முற்றம் புகுந்து முன்கடை யாரென
 
         (வாயில் காவலன் தூதர் வரவு கூறுதல்)
              1 - 8 : ஒருங்கு................என
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனும் தேவிமார் இருவரும் தமக்குள் அன்பினால் மனம் இயைந்து வாழுகின்ற நாள்களுள் வைத்து ஒருநாள் திருந்திய நிலையினையுடைய வாயிலின்கண் பெரிய கதவுகளால் அணிசெய்யப்பட்ட வாயிலைக் காக்குங் காவலன் உதயணன் திருமுன்வந்து திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி, 'அழகிய வீரக் கழலையணிந்த திருவடிகளையுடைய பெருமானே! அருள் கூர்ந்து கேட்டருள்க ! உயர்ந்த மதில்களால் அழகுற்ற உஞ்சையம் பெருநகரத்தின் வேந்தனாகிய போரின்கண் பிறக்கிடாத வென்றியையுடைய பிரச்சோதனன் என்னும் கொற்றவேந்தனுடைய தூதுவர்கள் வந்து நம் அரண்மனை முற்றத்திலே புகுந்து தலைவாயிலின்கண் இருக்கின்றனர்' என்று கூறாநிற்ப; என்க.
 
(விளக்கம்) ஆய் - அழகு. மதி : முன்னிலையசை. முன் கடையார் - தலைவாயிலினிடத்துள்ளார்.