பக்கம் எண் :

பக்கம் எண்:703

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         அந்தளிர்க் கோதையைப் பெற்றது மற்றவள்
    10    தந்தை தந்த மாற்றமுந் தலைத்தாள்
         இன்பம் பெருக வெதிர்வனன் விரும்பி 
         வல்லே வருக வென்றலின் மல்கிய
 
              (உதயணன் கூற்று)
         9 - 12 : அந்தளிர்.................என்றலின்
 
(பொழிப்புரை) அது கேட்ட உதயண மன்னன் இறந்தொழிந்தாளெனக் கருதப்பட்ட அழகிய தளிர்மாலையை யணிந்த வாசவதத்தை நல்லாளை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியும் அத்தத்தையின் தந்தையாகிய பிரச்சோதன மன்னன் தன் முன்னிலையிலே விடுத்த தூதுவர் வரவு கேட்டமையாலுண்டான மகிழ்ச்சியும் ஆகிய இருவேறு மகிழ்ச்சிகளாலே தன் நெஞ்சத்தே இன்பம் பெருகாநிற்ப, அத்தூதுவரை எதிர் கொள்ளற்கு விரும்பி அவர் ஈண்டு விரைந்து வருவாராக என்று அவ்வாயிலோனுக்குக் கூறாநிற்றலால்; என்க.
 
(விளக்கம்) கோதை : வாசவதத்தை, தந்தை : பிரச்சோதனன். தலைத்தாள் தந்த மாற்றம் என மாறுக. தலைத்தாள் - முன்னிலை. கோதையைப் பெற்றதும் மாற்றம் பெற்றதுமாகிய இரண்டானும் இன்பம் பெருக என்க. எதிர்வனன் - எதிர் கொள்ளுதற்கு. வல்லே -  விரைந்து.