பக்கம் எண் :

பக்கம் எண்:728

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
          விளங்கிழை பயந்த வேந்துபுறங் காக்கும்
          வளங்கெழு திருநகர் வல்லே செல்கென
          நாடுதலை மணந்து நாமுன் னாண்ட
          காடுகெழு குறும்புங் கனமலை வட்டமும்
  5       எல்லை யிறந்து வல்லை நீங்கி
          அழிந்த காலை யாணை யோட்டி
          நெருங்கிக் கொண்ட நீர்கெழு நிலனும்
          இவையினி யெங்கோ லோட்டி னல்லதை
          தமர்புகத் தரியா வென்றுதா னெழுதிய
  10      வழிபாட் டோலையொடு வயவரை விடுத்துக்
 
           (உதயணன் பிரச்சோதனனுக்கு ஓலை விடுதல்)
                1 - 10 : விளங்கிழை.............விடுத்து
 
(பொழிப்புரை) வாசவதத்தையையீன்ற பிரச்சோதன மன்னனாற் பாதுகாக்கப்படுகின்ற வளம் பொருந்திய அழகிய உஞ்சை நகரத்திற்கு விரைந்து செல்வீராகவென்று அம் மன்னன் தூதர்களுக்கு விடையீந்து அப் பிரச்சோதன மன்னனுக்கு எம்மால் முன்பு ஆளப்பட்டுப் பின்னர் "எம்முடைய அழிவுக்காலத்தே யாம் எம் நாட்டின் எல்லையைக் கடந்து விரைந்து காட்டகத்தே சென்றபொழுது தாங்கள் நும்முடைய ஆணையை எம்முடைய நாட்டினுஞ் செலுத்தி எம் மக்களை நலிந்து கைப்பற்றிக்கொண்ட காடுகள் பொருந்திய முல்லை நிலமும் கனவிய மலைகளையுடைய குறிஞ்சி நிலவட்டமும் நீர் பொருந்திய மருத நிலமும் நெய்தனிலமும் மீண்டும் எம் மாட்சியின்கீழ் வந்தாலன்றி அப் பகுதிகளிலே நுங்கள் மக்கள் புகுதலை எங்கோல் பொறுக்கமாட்டாது என்று தான் எழுதிய வழிபாட்டுத் திருமந்திரவோலையோடே மறவர்களை முற்படச் செலுத்தி; என்க.
 
(விளக்கம்) விளங்கிழை : வாசவதத்தை. வேந்து : பிரச்சோதனன். நகர் : உஞ்சை நகரம். வல்லே - விரைந்து. நாம் முன்னாண்ட குறும்பும் வட்டமும் நீர்கெழுநிலனும் என்க. நம் நாட்டோடு இயைந்து எம்மால் முன்பு ஆளப்பட்ட என்க. யாம் அழிந்தகாலை என்க. அழிவு - தெய்வயானையை மீட்கக் காட்டகம் புக்கமை. ஆணையோட்டி - ஆணை செலுத்தி. காடுகெழு குறும்பு - முல்லைநிலம். மலைவட்டம் - குறிஞ்சி. நீர்கெழு நிலன் - மருதமும் நெய்தலும் என்க. எனவே இப்பகுதியால் உதயணனுடைய அல்லற்காலத்தே வத்தவ நாட்டின் எல்லைகள் சிதைந்தன என்பதும் அந்நாட்டின்கண் முல்லை முதலிய நானிலத்தினும் சிற்சில பகுதிகளைப் பிரச்சோதனன் கைப்பற்றி ஆண்டுவந்தனன் என்பதும் உணரப்படும். தமர் - நுஞ்சுற்றம். என் தரியாது எனற்பாலது ஈறு கெட்டுத் தரியா என நின்றது; எங்கோல் தரியாது என்க. தரியாது - பொறாது. மாமனார் ஆகலின் வழிபாட்டோலை என்றார்.