பக்கம் எண் :

பக்கம் எண்:738

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
         வனப்பொடு புணர்ந்த வையாக் கிரமெனும்
         சிலைப்பொலி நெடுந்தேர் செவ்விதி னல்கி
         வீயா வென்றி விண்ணுத் தராயனோ
  60     டூகியுஞ் செல்கென வோம்படுத் துரைத்து
 
                  (யூகியின் புறப்பாடு)
           57 - 60: வனப்பொடு.....................உரைத்து
 
(பொழிப்புரை) பின்னர் இவற்றையெல்லாம் யூகியின்பால் ஒப்படைத்து அவனுக்கு அழகோடு கூடிய வையாக்கிரம் என்னும் பெயரையுடைய மலைபோன்று விளங்குகின்ற நெடிய தேரொன்றனைச் செம்மையுடையதாக வழங்கிக் கெடாத வெற்றியினையுடைய ''விண்ணுத்தராயன்'' என்னும் போர்மறவனோடு அந்த யூகியும் செல்வானாக என்று கூறி; என்க
 
(விளக்கம்) வனப்பு - தேரிலக்கணம். சிலை - மலை. செவ்விதின் என்புழிச் செம்மை - செப்பம்; செப்பமுடையதாக என்க. விண்ணுத்தராயன் இவனுக்கு வீயாவென்றி என்னும் அடைபுணர்த்தமையால் இவன் போர் மறவன் என்பது பெற்றாம். யூகியை விண்ணுத்தராயன்பால்  ஓம்படுத்து எனினுமாம். விண்ணுத்தராயன் யூகியின் மெய்காப்பாளனாக விடப்பட்டான் என்று கொள்க.