பக்கம் எண் :

பக்கம் எண்:740

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
           யாற்றற லன்ன கூந்தல் யாற்றுச்
  65       சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்
           அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்
           பிறையெனச் சுடருஞ் சிறுநுதல் பிறையின்
           நிறையெனத் தோன்றுங் கரையில் வாண்முகம்
  70       அரவென நுடங்கு மருங்கு லரவின்
           பையெனக் கிடந்த வைதேந் தல்குல்
           ஒளிபெறு வாயி னன்ன வொள்ளுகிர்
           வாழையந் தாளுறழ் குறங்கின் வாழைக்
  75       கூம்புமுகி ழன்ன வீங்கிள வனமுலை
           விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவற்
           காந்தண்முகி ழன்ன மெல்விரல் காந்தட்
           பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை
  80       அன்னத் தன்ன மென்னடை யன்னத்துப்
           புணர்வி னன்ன தண்டாக் காதல்
           அணிக்கவின் கொண்ட வதிநா கரிகத்து
           வனப்புவீற் றிருந்த வாசவ தத்தையும்
 
               (வாசவதத்தை வண்ணனை)
       64 - 83 : யாற்றறல்....................வாசவதத்தையும்
 
(பொழிப்புரை) யாற்றின்கண் அறல்பட்டுக் கிடக்கும் கருமணலை ஒத்த கூந்தலையும் அந்த யாற்று நீரின்கண் தோன்றும் சுழியை ஒத்திருந்த குழிபோன்ற கொப்பூழையும் வில்போலக் கிடந்த புருவங்களையும் வில்லினது அம்புபோன்று கிடந்த சிவந்த கடையினையுடைய குளிர்ந்த கண்ணையும் பிறைபோலச் சுடரா நின்ற சிறிய நெற்றியையும் அப்பிறை வளர்ந்து நிறைந்த திங்களை ஒத்துத் தோன்றாநின்ற மறுவற்ற ஒளியையுடைய முகத்தையும் பாம்புபோல் வளைகின்ற இடையினையும் அப் பாம்பின் படம் போலக் கிடந்த அழகிய உயர்ந்த அல்குலையும் கிளிபோன்று மிழற்றுகின்ற மொழியினையும் கிளியினது ஒளியுடைய அலகையொத்த  ஒளியுடைய நகத்தினையும் வாழையினது அழகிய தண்டினையொத்த தொடையினையும் வாழையினது குவிந்த அரும்பையொத்த பருத்த இளமையுடைய அழகிய முலையினையும் மூங்கில்போலத் திரண்ட மெல்லிய தோளையும் அம் மூங்கிலின்கண் உண்டாகும் விளங்காநின்ற முத்தைப்போன்று விளங்குகின்ற ஒளியினையுடைய பல்லினையும் காந்தள் அரும்பு போன்ற மெல்லிய விரல்களையும் அக் காந்தட் பூங்குலையையொத்த வளையலணிந்த  முன் கையினையும் அன்னம்போன்ற மெல்லிய நடையினையும் அன்னப் பறவைகளின் புணர்ச்சியையொத்த குறையாத காதலையும் இவற்றோடு அணிகலன்களின் அழகினையுங்கொண்ட மிக்க நாகரிகத்தையுடைய அழகே குடிகொண்டிருந்த வாசவதத்தையும்; என்க.
 
(விளக்கம்) அறல் - நீரோட்டத்தால் அல்லது காற்றியக்கத்தால் அற்றற்றுக் கிடந்த கருமணல். சுழி - நீர்ச்சுழி. மழைக்கண் - குளிர்ந்த கண். பிறையின் நிறை - முழுத்திங்கள். கறை - மறு; களங்கம். வாள் - ஒளி. பை - பாம்பின் படம், ஐது - அழகியதாகிய; மெல்லிதாகியவும் ஆம். கிளவி - மொழி. வாயினன்ன - வாய்போன்ற. வாய் - ஈண்டு அலகு. உகிர் - நகம். வாழையந்தாள் - வாழையின் அழகிய தண்டு. கூம்புமுகிழ் - குவிந்த அரும்பு . வேய் - மூங்கில். பூந்துடுப்பு - பூங்குலை. அன்னத்துப் புணர்வு - அன்னப் பறவைகளின் அன்புக் கேண்மை. அணிக்கவின் - அணிகலன்களாலுண்டாய அழகு. அதி நாகரிகம் - மிக்க நாகரிகம். நாகரிகம் - கண்ணோட்டம். வனப்பு - அழகு.