பக்கம் எண் :

பக்கம் எண்:763

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           நோக்கினு மொதுக்கினு மாக்கே ழணிந்த
           சாயல் வகையினுஞ் சால்புடை மொழியினும்
           ஆசில் வாயினு மணிபெற நிரைத்த
     155    பல்லினுங் கண்ணினு மெல்விரல் வகையினும்
           நறுமென் குழலினுஞ் செறிநுண் புருவத்
           தொழுக்கினு மிழுக்கா வல்குற் றடத்தினும்
           மெல்லிய விடையினு நல்லணி குறங்கினும்
           குற்றமின் முலையினு முகத்தினுந் தோளினும்
     160    மற்றவை தொலையச் செற்றொளி திகழத்
 
                      (இதுவுமது)
                152 - 160 : நோக்கினும்...........சென்று
 
(பொழிப்புரை) தன்னுடைய நோக்கத்தாலும் நடையினாலும் சிறந்த நிறத்தால் அழகுற்ற சாயல் வகையாலும் சால்புமிக்க மொழியாலும் குற்றமற்ற வாயினாலும் அழகுண்டாக நிரல்பட்ட பல்லாலும் கண்ணாலும் மெல்லிய விரல் வகையினாலும் நறிய மெல்லிய கூந்தலாலும் செறிந்த நுண்ணிய புருவத்து மயிரொழுக்காலும் காவல் வழுவாத அல்குலாலும் மெல்லிய இடையினாலும் நல்ல அழகிய தொடையினாலும் குற்றமற்ற முலையினாலும் முகத்தாலும் தோளாலும் தோல்வியுறும்படி வென்றவளும் என்க.
 
(விளக்கம்) நோக்கிற்கு மானும் நடைக்கு அன்னமும் சாயலுக்கு மயிலும் மொழிக்கு மலைத்தேனும் வாய்க்குப் பவளமும் பல்லிற்கு நித்திலமும் கண்ணுக்குக் கயலும் விரலுக்குக் காந்தட்பூவும் கூந்தலுக்கு முகிலும் புருவத்திற்கு வில்லும் அல்குலுக்குப் பையும் இடைக்குத் துடியும் தொடைக்கு யானைக்கையும் முலைக்குக் குரும்பையும் முகத்திற்குக் கதிர்மதியும் தோளுக்கு மூங்கிலும் உவமைகள் என்க. இஃது முறை நிரனிறை அணி. ஒதுக்கு - நடை. கேழ் - நிறம். ஆசு - குற்றம். நிரைத்த - நிரல்பட்ட. காவல் இழுக்கா அல்குற்றடம் என்க. குறங்கு - தொடை. மற்றவை - முன் கூறப்பட்ட மான் முதலியவை.