பக்கம் எண் :

பக்கம் எண்:766

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           மண்டல மாக்கி வட்டணை முகத்தே
     180    கொண்டனள் போக்கிக் குறிவயிற் பெயர்த்துப்
           பூவீழ்த் தெழுப்பிப் புறங்கையின் மற்றவை
           தான்மறித் தடித்துத் தகுதியி னெழவெழக்
           காம தேவியர் காண்பன ருவப்பப்
           பூமி தேவியிற் புறம்போ வனள்போற்
     185    பைய வெழுவோள் செய்தொழிற் கீடாக்
           கையுங் காலு மெய்யு மியையக்
           கூடுமதி முகத்திடைப் புருவமுங் கண்ணும்
 
                    (இதுவுமது)
             179 - 187 : வட்டணை.........கண்ணும்
 
(பொழிப்புரை) தன்முன்னே அவ்வட்டத்தின்கண் பந்தினைக் கைக்கொண்டு வானத்தே எறிந்து மீட்டும் அவற்றைப் பிடித்து நிலத்தின்கண் குறிப்பிட்ட ஓரிடத்தே அடித்தடித்து எழுப்பி மீண்டுவரும் அப் பந்துகளைப் புறங்கையால் தடுத்துத் தடுத்து அடித்து அவை நிரலாக வானில் எழுந்தோறும் எழுந்தோறும் விருப்பமுடைய அப் பெருந்தேவியர் கண்டு உவக்கும்படி நிலமகளாகிய தோழியைவிட்டு அகன்று போவாள்போல மெல்ல எழுகின்றவள், தான் செய்யும் தொழிலுக்கு ஈடாகத் தனது கையும் காலும் உடம்பும் பொருந்தாநிற்ப எல்லாக் கலைகளும் கூடிய திங்கள்போன்ற தன் முகத்தின்கண் புருவங்களும் கண்களும்; என்க.
 
(விளக்கம்) வட்டணை - வட்டம். பூ - பூமி. மறித்து - தடுத்து. காம தேவியர் - விருப்பமுடைய தேவிமார். பூமிதேவி - நிலமகள். கூடுமதி : வினைத்தொகை. 88 ஆம் எண்ணில் நிற்றற்குரிய ஓரடி முழுதும் சிதைவுற்றது.