பக்கம் எண் :

பக்கம் எண்:770

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது
 
           மண்ணினள் விண்ணின ளென்றறி யாமை
     215    ஒண்ணுதன் மாதரை யுள்ளுழி யுணரும்
           தன்மையு மரிதெனத் தனித்தனி மயங்கி
           மாயங் கொல்லிது மற்றொன் றில்லென
           ஆய நவின்றமை யறிந்தன ளாகிச்
           சொல்லிய மகளி ரெல்லாங் காணச்
     220    சில்லரிக் கண்ணி மெல்லென முரியாச்
           செந்தளிர் பொருவச் சிவந்த கையாற்
           கந்துக மேந்திக் கசிந்த கோதைக்கு
           மிகைக்கை காணார் நகைப்படு மவளென
           உகைத்தெழு பந்தி னுடனெழு வனபோற்
     225    சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்
 
                  (இதுவுமது)
          214 - 225 : மண்ணினள்..........தாமம்
 
(பொழிப்புரை) இவள் மண்ணிடத்தாளோ ? விண்ணிடத்தாளோ ? என்று அறியாமல் ஒள்ளிய நுதலையுடைய இம்மானனீகை இருக்குமிடத்தை அறியுந் தன்மைதானும் நமக்கு அரிதாயிற்று எனவும் தனித் தனியே மயங்கி இது மாயமோ ? என்றும் இது மாயமேயன்றி வேறொன்றில்லை ! என்றும் அத்தோழிமார் கூறி வியத்தலை அம்மானனீகை அறிந்தவளாய் ஞெரேலென அங்ஙனம் கூறிய மகளிரெல்லாம் காணும்படி சிலவாகிய வரி பரந்த கண்ணையுடைய அம்மானனீகை மெல்ல வளைந்து செவ்விய தளிர்போலச் சிவந்த தன் கையால் பந்துகளை ஏந்தி வருந்திய இவளுக்கு மிகுதியான கைகளைக் காணமாட்டாராய் இவளை இகழ்வர் ஆதலின் இவள் எள்ளப்படும் என்று இரங்குவனபோலத் தாமும் அவள் கைகள் போன்று பந்துகளை அடிப்பனவாய் உகைத்து எழுகின்ற அப்பந்துகளோடே எழுகின்றனபோல மலர்மாலைகள் எழுந்து சுழன்றன ; என்க
 
(விளக்கம்) மாயம் - இந்திர சாலம் முதலியன. ஆயம் - தோழிமார் கூட்டம். சில்லரிக் கண்ணி : வாசவதத்தை. முரியா - வளைந்து : பொருவ : உவம உருபு. கந்துகம் - பந்து. கசிந்த - வருந்திய. கோதை : மானனீகை. மிகைக்கை - மிகுதியாகிய கை. மிகைக்கை காணாராய் இகழ்வர் ஆதலின் அவள் நகைப்படுவள் என்று இரங்கித் தாமும் கைபோலத் தோன்றிப் பந்தினுடன் எழுவனவாய்த் தாமங்கள் சுழன்றன என்று இயைபு காண்க. உகைத்தெழு பந்து - உகைக்கப்பட்டு எழுபந்து.