பக்கம் எண் :

பக்கம் எண்:776

உரை
 
4. வத்தவ காண்டம்
 
12. பந்தடி கண்டது முற்றிற்று.
 
          கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்
          மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்
   260    இவைமுத லினியன வவிநயப் பல்குறி
          நவையற விருகண் சுவையொடு தோன்ற
          நீலப் பட்டுடை நிரைமணி மேகலை
          கோலமொ டிலங்கத் தானுயிர்ப் பாற்றி
          ஓடரிக் கண்ணி யுலாவர நோக்கிப்
 
                    (இதுவுமது)
           258 - 264 : கழுநீர்...........நோக்கி
 
(பொழிப்புரை) மேலும் செங்கழுநீர் மலரையும் நிகர்த்து வளவிய நீரின்கண் வாழும் கயல்மீன்போன்று மதர்ப்புற்றும், அம்மதர்ப்பு நீங்கியும் சுருக்கியும் பெருக்கியும் இவை முதலிய பற்பல அவிநயக் குறிகளோடே அவளுடைய இரண்டு கண்களும் சிறிதும் குற்றமின்றிச் சுவையோடே தோன்றுதலாலும், அம்மானனீகை நீலப்பட்டாடை உடுத்து அதன்மேலே நிரல்பட்ட மணிமாலைக் கோவையாகிய மேகலையணிதானும் அவளழகிற்கு அழகு செய்வதாய்த் திகழாநிற்ப, அம்மானனீகை தான் பந்தாடிய இளைப்பொழியும் பொருட்டு மெல்லென உயிர்ப்பெறிந்து அக்களத்தின்கண் உலாவி வருதலை நோக்கியதாலும் என்க.
 
(விளக்கம்) அம்மதர்ப்பினைத் தவிர்க்கும் என்க. சுவை - காமச்சுவை. அவள் மேனியழகை எடுத்துக் காட்டலாலே நீலப்பட்டுடை என்றார். பொன்னிறத்தை நீல நிறம் மிகுத்துக் காட்டல் இயல்பு. உயிர்த்து இளைப்பாற்றி என்க. ஓடரிக்கண்ணி : மானனீகை.