பக்கம் எண் :

பக்கம் எண்:788

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           
    40    எம்மிறை படையை யெறிந்தன னோட்டிச்
          செம்மையிற் சிலதியர் தம்மொடுஞ் சேரப்
          பாஞ்சா லரசன் பற்றிக் கொண்டு
          தேன்றேர் கூந்தற் றேவியர் பலருளும்
          தன்னமர் தேவிக் கீத்த பின்றை
    45    வண்ண மகளா யிருந்தனெ னன்றி
          அருளிய தியாது மறியே னியானெனக்
          கடல்புரண் டெனப்பயந் தழுதன ணிற்ப
 
                (இதுவுமது)
          40 - 47 : எம்மிறை............நிற்ப
 
(பொழிப்புரை) பெருமானே ! எங்கள் அரசனாகிய கோசல மன்னனின் படையைப் பாஞ்சால மன்னனாகிய ஆருணி போரின்கண் தாக்கி அரண்மனையை விட்டுத் துரத்தியபின் என்னை இன்னும் பல பணிமகளிரோடே ஒரு சேரப் பற்றிக்கொண்டு நடுநிலைமையுடனே வண்டுகள் இரை தேர்கின்ற கூந்தலையுடைய தேவிமார் பலருள்ளும் தன்னைப் பெரிதும் விரும்பும் கோப்பெருந்தேவிக்கு வழங்கினன். அங்ஙனம் வழங்கிய பின்னர் யான் அப்பெருந்தேவியின் வண்ணமகளாய்ப் பணி செய்து கொண்டிருந்தேன்.இஃதன்றிப் பெருமான் வினவியருளியவற்றுள் யான் ஒன்றனையும் அறிவேனல்லேன்," என்று கூறிக் கடல் புரண்டு வந்தாற்போலப் பெரிதும் அஞ்சி அழுது நிற்ப; என்க.
 
(விளக்கம்) எம்மிறை என்றது கோசல மன்னனை. செம்மையில் என்றது மகளிராகிய எமக்குத் தீதொன்றும் செய்யாமல் என்பது குறித்து நின்றது. தேன் - வண்டு. தேர்தல் - ஆராய்தல். தன்னமர் - தன்னைப் பெரிதும் விரும்பும். அருளியது - வினவியது. கடல் புரண்டு வருங்கால் மாந்தர் பயந்து அழுமாப்போலே அழுது நிற்ப என்க.