பக்கம் எண் :

பக்கம் எண்:795

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         நினைத்த வாசக நிரப்பின் றெழுத
         இடத்தள வின்மையிற் கருத்தறி வோர்க்குப்
   90    பரந்துரைத் தென்னை பாவை யிக்குறை
         இரந்தனெ னருளென விறைமக னெழுதி
         மெல்லியற் கொத்த விவையெனப் புகழ்ந்து
         புல்லினன் றேவியைச் செல்கென விடலும்
 
                  (இதுவுமது)
          88 - 93 : நினைத்த.........விடலும்
 
(பொழிப்புரை) "பாவாய் ! யான் நினக்குக் கூற எண்ணிய மொழிகளையெல்லாம் வறுமையின்றி எழுதுதற்கு இவ்வேட்டின்கண் (நெற்றியில்) இடம் இன்மையால் அவற்றை எழுதாது விடுகின்றேன். மேலும் ஒருவர் கருத்தினைச் சொல்லாமலே அறிந்து கொள்ளும் நின்போன்ற அறிவுடையோர்க்குப் பாரித்து உரைத்தலும் வேண்டாவன்றே. பாவாய்! எனது இக் குறையைத் தீர்க்கும்படி நின்னை இரந்து கேட்கின்றேன், எனக்கு அருள் செய்வாயாக!" (எனவும்) அக் கோமகன் எழுதி முடித்து வாசவதத்தையை நோக்கி "மெல்லியலோய்! நின் அழகிற்கேற்ற அலங்காரம் இவைகளே காண் :" என்று அவளைப் புகழ்ந்து தழுவி "இனி நீ செல்க" என்று விடுத்தலும் என்க.
 
(விளக்கம்) நிரப்பு - வறுமை. கருத்தறிவோர் - பிறர் கருத்தினை அவர் கூறாமலே குறிப்பாலுணர்ந்து கொள்பவர். பரந்துரைத்தல் - பாரித்துக் கூறுதல். என்னை? என்னும் வினா வேண்டா என்பதுபட நின்றது. குறை என்றது இறந்துபடாமல் காத்திடுக என்னும் வேண்டுகோளை. இறைமகன் : உதயணன். மெல்லியல் : வாசவதத்தை. தேவி : வாசவதத்தை.