பக்கம் எண் :

பக்கம் எண்:797

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          வழிநாட் காலைக் கழிபெருந் தேவியைப்
          பழுதற வழகொடு புனைநலம் புனையாக்
          குங்கும மெழுதிக் கோலம் புனைஇ
    105    அங்கவ ணுதன்மிசை முன்பவ னெழுதிய
          பாடை கொண்டுதன் பெயர்நிலைக் கீடா
          நீல நெடுங்க ணிரைவளைத் தோளி
          மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி
          நெறிமயிர்க் கருகே யறிவரி தாக
 
          (மானனீகை எழுதி விடுத்தல்)
         102 - 109 : வழிநாள்............அரிதாக
 
(பொழிப்புரை) மறுநாள் காலைப் பொழுதிலே கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையை அம் மானனீகை குற்றமின்றி அழகோடு ஒப்பனை அழகுசெய்து குங்குமத்தால் கோலம் எழுதி அலங்கரித்து அப்பொழுதே அத் தேவியின் நெற்றியின்மேல் முன்னர் அவ் வேந்தன் எழுதிய அந்த யவன மொழியைக் கொண்டே அம் மன்னவன் தன் பெயரை முன்னிறுத்தித் தனக்கு எழுதிய ஓலைப் பாசுரத்திற்கு ஈடாகக் கரிய நெடிய கண்களையும் நிரல்பட்ட வளையலணிந்த தோளையுடைய அம்மானனீகை மறுமொழி கொடுக்கும் எண்ணம் உடையவளாய் அத் தேவியின் நெறிப்பமைந்த கூந்தலின் அருகில் பிறர் அறிதற்கு அரிதாக; என்க.
 
(விளக்கம்) வழிநாள் - மறுநாள். கோப்பெருந் தேவியர் இருவருள் முதற்றேவி என்பதுதோன்ற, கழிபெருந்தேவி என்றார். புனைநலம் - ஒப்பனை; அழகு. புனையா - புனைந்து. குங்குமக் கோலம் எழுதிப் புனைந்து என்க. அவள் : வாசவதத்தை. அவன் எழுதிய பாடை - உதயணன் எழுதிய யவன மொழி. தன்பெயர் நிலை - தன் பெயர் நின்ற ஓலைப் பாசுரம். தோளி - மானனீகை. நெறி - நெறிப்பு. அறிவு - அறிதல்.