பக்கம் எண் :

பக்கம் எண்:824

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          புலர்ந்த காலைப் புதுமண மாதரை
          மாபெருந் தேவி கூவினள் சீறி
          ஓவிய வெழினித் தூணொடு சேர்த்துக்
          கொற்றவன் றன்னொடு கூத்தப் பள்ளியுட்
     5    சொற்றது சொல்லெனக் கச்சினின் யாத்தனள்
          அருகொரு மாதரை யிவண்மயி ரரிதற்
          கொருகத் தரிகை தருகென வுரைப்ப
 
        (வாசவதத்தை மானனீகையின் கூந்தலைக்
                 குறைக்கப் புகுதல்)
            1 - 7 : புலர்ந்த........உரைப்ப
 
(பொழிப்புரை) பொழுது விடிந்த உடனே கோப்பெருந்தேவி மானனீகையை அழைத்துச் சினந்து ஆங்கு ஓவியம் வரையப்பட்டுத் திரையிடப்பட்டு நின்றதொரு தூணோடு அம்மானனீகையைச் சேர்த்து 'ஏடீ! நீ மன்னவனோடு அக்கூத்தப்பள்ளியுள் கூறியதனைச் சொல்!' என்று கூறிக்கொண்டே ஒரு கச்சால் கட்டினளாகிப் பக்கத்தே நின்ற பணிமகள் ஒருத்தியை நோக்கி 'ஏடீ! நீ சென்று இவளுடைய கூந்தலைக் கத்தரித்தற்கு ஒரு கத்தரிகை கொணர்வாயாக!' என்று கட்டளையிடாநிற்ப என்க.
 
(விளக்கம்) புதுமண மாதர் என்றார் அண்மையில் மானனீகை களவு மணம் புணர்ந்த செய்தியை யாம் நினைவிற் கொள்ளுதற்கு. மாபெருந்தேவி : வாசவதத்தை. ஓவிய எழினித்தூண் - ஓவியம் எழுதப்பட்ட திரையால் மூடப்பட்ட தூண். இனி திரை கட்டுந்தூண் எனினுமாம். கொற்றவன் : உதயணன், சொற்றது - சொன்னது. கச்சு - ஓர் ஆடை, யாத்தனள் - கட்டினள். அருகு நின்ற ஒரு மாதரை என்க. கத்தரிகை - கத்தரிக்கோல்.