பக்கம் எண் :

பக்கம் எண்:834

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          வயந்தகன் மொழிபொழு திழிந்த தென்செயல்
          யானு மவ்வள வானவை கொண்டு
          தேனிமிர் கோதை கேசந் தாங்குவென்
          மற்றறி யேனென வணங்கினன் போந்து
 
               (யூகி விடையளித்தல்)
            60 - 63 : வயந்தகன்............போந்து
 
(பொழிப்புரை) அது கேட்ட யூகி, வேந்தே! மானனீகையின் கூந்தல் குறைக்கப்படாமல் யான் ஆறேழு நாழிகை தடுத்து வைப்பல் என்று வயந்தகன் கூறினன். யான் சென்று அச்செயலை நிகழாமல் தடுத்துவைக்கும் காலம் அவ் வயந்தகன் கூறிய காலத்தினும் குறைந்ததாகவே இருத்தல் கூடும். யானும் என்னாலியன்ற உபாயங்களை மேற்கொண்டு அத்துணைக் காலமாயினும் வண்டு முரலும் மாலையணிந்த அம் மானனீகையின் கூந்தல் குறைக்கப்படாமல் பாதுகாப்பல். அதன்மேலும் காத்தற்கு யான் அறியேன்' என்று அம் மன்னனை வணங்கிச் சென்று என்க.
 
(விளக்கம்) வயந்தகன் கூறிப்போந்த பொழுதினுங் காட்டில் யான் காக்கும் பொழுது இழிந்தது என்றவாறு. இழிந்தது - குறைந்தது. என் செயலால் காக்கப்படும்பொழுது இழிந்தது என்க. அவ்வளவு - அவ்வளவுடைய காலமேனும். ஆனவை - எனக்குத் தோன்றிய உபாயங்களை. கோதை : மானனீகை. கேசம் - கூந்தல். தாங்குவென் - பாதுகாப்பேன்.