பக்கம் எண் :

பக்கம் எண்:850

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
           செய்தது பொறுவெனத் தெருளாள் கலங்கி
   150     எழுதரு மழைக்க ணிரங்கிநீ ருகுப்ப
           அழுகை யாகுலங் கழுமின ளழிய
           விம்மி விம்மி வெய்துயிர்த் தென்குறை
           எம்முறை செய்தே னென்செய் தேனென
           மாதர்க் கண்ணீர் மஞ்சன மாட்டி
   155     ஆதரத் துடைந்தனள் பேதைகண் டுடைத்துக்
           கெழீஇய வவரைக் கிளந்துடன் போக்கித்
 
                     (இதுவுமது)
          149 - 156 : தெருளாள்............போக்கி
 
(பொழிப்புரை) இன்னும் மனத்தெளிவு பெறாளாய்க் கலங்கி எழுதுதற்கரிய குளிர்ந்த தன் கண்கள் தான் செய்த பிழைக்கு இரங்கி நீர் சொரியா நிற்ப, அழுகையும் துயரமும் நிரம்பியவளாய் நெஞ்சழிய விம்மி விம்மி வெய்தாக மூச்செறிந்து "அந்தோ! இஃது என் குறையே! என்ன முறை செய்தேன்? என்ன செய்து விட்டேன்?" என்று புலம்பி அழகிய தனது அன்புக் கண்ணீராலேயே அம் மானனீகையை நீராட்டி அன்பாலே நெஞ்சுடைந்தவளாய் மானனீகையின் கண்ணீர் துடைத்துத் தன்னைச் சூழ்ந்து நிற்கும் பணிமகளிரையெல்லாம் கட்டளையிட்டு அகற்றி என்க.
 
(விளக்கம்) எழுதரும் கண் - ஓவியத்தில் எழுதுதற்கியலாத பேரழகுடைய கண் என்க. அழுகையும் ஆகுலமும் என்க. ஆகுலம் - துயரம். என் குறை - என் குற்றமே. மாதர்க்கண் - அன்புநோக்குடைய கண். பேதை - மானனீகை. கெழீஇய அவரை - தன்னைச் சூழ்ந்து நின்ற தோழிமாரை. கிளந்து - அகலப்போமின் என்று கூறி என்க.