பக்கம் எண் :

பக்கம் எண்:859

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          தெரிவன னுணர்ந்து விரைவனன் போந்து
          துதைதார் மார்பி னுதையணற் குறுகிச்
          செவ்விக் கோட்டியுட் சென்றுசேர்ந் திசைப்பித்
    20    தவ்வழிக் கண்ணுற் றறிவி னாடிப்
          பயத்தொடு புணர்ந்த பாடி மாற்றம்
          இசைப்பதொன் றுடையே னிகழ்தல்செல் லாது
          சீர்த்தகை வேந்தே யோர்த்தனை கேண்மதி
 
        (விரிசிகையின் தந்தை உதயணனை அடைதல்)
             17 - 23 : விரைவனன்...........கேண்மதி
 
(பொழிப்புரை) விரைந்துசென்று மலர் செறிந்த மாலையினையுடைய மார்பினையுடைய உதயணமன்னனை அணுகி அம்மன்னன் நல்லவையின்கண் இருந்த செவ்வி தேர்ந்து கொண்டு அவ்வவையின் வாயிலிற் சென்று வாயிலோர் வாயிலாய்த் தனது வரவினை அம் மன்னனுக்கு அறிவித்து, அவன் உடம்பாடு பெற்று அவனையணுகி நோக்கி, 'மிக்க புகழையுடைய வேந்தே! யான் என் அறிவினால் ஆராய்ந்து பார்த்ததும், பெரும் பயனோடு கூடியதுமாகிய பாடிவீட்டின்கண் நிகழ்ந்த செய்தி ஒன்றனை நினக்குக் கூறவந்துள்ளேன்; அதனை இகழாது கேட்டு ஆராய்ந்து கொள்க !' என்க.
 
(விளக்கம்) விரைவனன் - விரைந்து. செவ்விக்கோட்டி - தன்காரியத்திற்கு உதவியான அவை. தன் வரவினை இசைப்பித்து என்க. பண்டு உதயணன் உண்டாட்டின் பொழுது, படவீட்டிலிருந்த காலத்தே நிகழ்ந்த செய்தி என்பான் பாடி மாற்றம் என்றான். பாடி - படவீடு. சீர் - மிக்க புகழ். கேண்மதி என்புழி மதி முன்னிலையசை.