பக்கம் எண் :

பக்கம் எண்:860

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          நீயே நிலமிசை நெடுமொழி நிறீஇ
    25    வீயாச் சிறப்பின் வியாதன் முதலாக்
          கோடா துயர்ந்த குருகுலக் குருசில்
          வாடா நறுந்தார் வத்தவர் பெருமகன்
          தேனார் மார்ப தெரியின் யானே
          அந்தமில் சிறப்பின் மந்தர வரசன்
 
              (அம் முனிவன் கூற்று)
             24 - 29 : நீயே............அரசன்
 
(பொழிப்புரை) வண்டுகள் ஆரவாரிக்கும் மார்பினையுடைய மன்னனே ! நீ தானும் இந்நில உலகத்தின்மேல் பெரும் புகழை நிறுவிய அழியாத சிறப்பினையுடைய ''வியாதன்'' என்னும் வேந்தன் முதல்வனாகக் கோணாது மேன்மேலும் உயர்ந்துவந்த குருகுலத்தோன்றல்; வாடாத நறிய மாலையினையுடைய வத்தவ நாட்டினர் மன்னன்; இனி ஆராயுங்கால் யானும் முடிவற்ற சிறப்பினையுடைய வித்தியாதர உலகத்துள்ள ஓர் அரசனே காண்!' என்க.
 
(விளக்கம்) நெடுமொழி - புகழ். நிறீஇ - நிறுத்தி. வீயா - அழியாத. வியாதன் - குருகுலத்து முதல் மன்னன். தேன் - வண்டு. தெரியின் - ஆராயின். அந்தம் - முடிவு. மந்தரவரசன் - வித்தியாதர உலகத்துள்ள அரசன். இதனால் நீயும் யானும் சிறந்த அரச மரபினரே எனக் குல ஒப்புமை கூறினா னாதல் உணர்க.