பக்கம் எண் :

பக்கம் எண்:861

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
         
    30    யாப்புடை யமைச்சொடு காப்புக்கடன் கழித்தபின்
          உயர்ந்த வொழுக்கோ டுத்தர நாடிப்
          பயந்த புதல்வரைப் படுநுகம் பூட்டி
          வளைவித் தாரும் வாயி னாடி
          விளைவித் தோம்புதும் வேண்டிய தாமென
    35    ஒடுக்கி வைக்கு முழவன் போல
          அடுத்த வூழிதோ றமைவர நில்லா
          யாக்கை நல்லுயிர்க் கரண மிதுவென
          மோக்க முன்னிய முயற்சியே னாகி
          ஊக்கஞ் சான்ற வுலகிய றிரியேன்
 
                    (இதுவுமது)
           30 - 39 : யாப்புடை..............திரியேன்
 
(பொழிப்புரை) "வேந்தே ! யான் எனது நாட்டின்கண் பொருத்தமான அமைச்சு முதலிய அரசுறுப்புக்களோடு மன்னுயிர் காவலாகிய எனது கடமையை நெடுங்காலம் செய்து கழித்த பின்னர் எனது இறுதிக்காலத்தே செய்யவேண்டிய கடமையை ஆராய்ந்து யான் ஈன்ற மக்களை அரசியற்சாகாடு பூட்டி விட்டுப் பின்னர் ஓர் உழவன் தான் பிற்காலத்தே உண்ணுதற்குரிய வழியை முற்பட ஆராய்ந்து விளைதற்குரிய விதைகள் நமக்கு இன்றியமையாது வேண்டப்படுதலின் அதனைச் சூழ அரணிட்டுப் பாதுகாப்பேம் என்று துணிந்து அவ்விதையினை அவ்வரணகத்தே ஒடுக்கி வைக்குமாறு போல அடுத்தடுத்து வாராநின்ற காலத்தின்கண் தனக்குப் பொருந்துமாறு நிலை யில்லாத யாக்கையினையுடைய நல்ல எனது உயிருக்கு இதுவே நிலைத்த அரணாகும் என்று கருதி வீடுபேற்றினைக் கருதிய தவமுயற்சியை யுடையேனாய் ஊக்க மமைந்த சான்றோர் நெறியிற் பிறழாமல்' என்க.
 
(விளக்கம்) காப்புக் கடன் - மன்னுயிரைக் காவல் செய்யும் கடமை. உயர்ந்த ஒழுக்கம் என்றது மனம் பொறிவழிச் செல்லாமல் அடக்குதல். உத்தரம் நாடி - இறுதிக் காலத்துச் செய்யும் கடமையை நாடி. படுநுகம் - அரசியற் சாகாட்டின் நுகத்தடி; என்றது அரசாட்சியை ஒப்புவித்து என்றவாறு. உழவன் ஆரும் வாயில் நாடி விளைவித்து வேண்டியதாம் என்று ஓம்புதும் என்று வளைவித்து ஒடுக்கி வைக்குமாறு போல என்க. ஆரும்வாயில் - உண்ணுதற்குரிய வழி. வளைவித்து - சூழ அரண் செய்து. ஊழி - காலம். அமைவர - பொருத்தமுண்டாக. நில்லாத யாக்கையையுடைய உயிர் என்க. பேரின்பம் நுகர்தற்குரிய உயிர் என்பான் நல்லுயிர் என்றான். இது - இம் முயற்சி. மோக்கம் - வீடு. உலகு - சான்றோர்.