பக்கம் எண் :

பக்கம் எண்:876

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          தடந்தோள் வீசித் தகைமாண் வீதியுள்
          நடந்தே வருக நங்கை கோயிற்
    135    கணியில் யாக்கை மணியுடை நலத்திற்
          றமிய ளென்பது சாற்றுவனள் போலக்
          காவ லின்றிக் கலியங் காடியுண்
          மாவும் வேழமும் வழக்குநனி நீக்கி
          வல்லென மணிநில முறாமை வாயில்
    140    எல்லை யாக வில்லந் தோறும்
          மெல்லெ னறுமலர் நல்லவை படுக்கென
          உறுதொழி லிளையரை யுதயண னேவா
 
                   (இதுவுமது)
            133 - 142 : தடந்தோள்.........ஏவா
 
(பொழிப்புரை) மகளிருட் சிறந்த அவ்விரிசிகை அணிகலன் இல்லாத தனது யாக்கை மணியினும் சிறந்த ஒளியினையுடையது. அவ்வழகினால் யான் ஒப்பற்றவள் என்பதனை இந்நகர மாந்தர்க்கு அறிவிப்பாள் போன்று தனது பெரிய கைகளை வீசி அழகால் மாண்புற்ற நம் நகர வீதியுள் காலாலே நடந்து வருவாளாக என்று அறிவித்து, அங்ஙனம் வருதற்பொருட்டுக் காவல் இல்லாமல் செய்து ஆரவாரமுடைய அங்காடித் தெருவில் குதிரையும் யானையும் இயங்குதலைத் துவர விலக்கி அழகிய நிலம் அவள் அடியின்கண் வல்லென்று உறுத்தாமைப் பொருட்டு அரண்மனை வாயில் தொடங்கி உள்ள இல்லங்களின் வாயில்தோறும் மெல்லென்னும் நறிய நல்லனவாகிய மலர்களைப் பரப்பி வைத்திடுக! என்று அத்தொழிலில் மிக்க இளைஞரை அம்மன்னவன் ஏவிப் பின்னர் என்க.
 
(விளக்கம்) மணியுடை நலம் - மணி இயல்பாகவே உடைத்தாயிருக்கின்ற ஒளி அழகு. அணியில் யாக்கை - ஒப்பனை செய்யாத யாக்கை. நங்கை நலத்தில் தமியள் என்பது சாற்றுவனள் போல வீசி நடந்தே கோயிற்கு வருக என மாறி இயைத்துக்கொள்க. தமியள் - ஒப்பற்றவள். அங்ஙனம் வரும் பொருட்டு என்க. அங்காடி - கடைத்தெரு. வல்லென : குறிப்புமொழி. மணி நிலம் - அழகிய நிலம். தமியள் - ஒப்பற்றவள். வாயில் - அரண்மனை வாயில் என்க. நல்லவையாகிய நறுமலர் என்க.