பக்கம் எண் :

பக்கம் எண்:879

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
            வேரியுந் தகரமும் விரையு முரிஞ்சி
            ஆர்கலி நறுநீர் மேவர வாட்டித்
            துய்யறத் திரண்டு தூறலு மிலவாய்
            நெய்தோய்த் தன்ன நிறத்த வாகிக்
    10       கருமையிற் கவினிப் பருமையிற் றீர்ந்த
            சில்லென் கூந்தலை மெல்லென வாரிக்
            கானக் காழகிற் றேனெய் தோய்த்து
            நறுந்தண் கொடிப்புகை யறிந்தளந் தூட்டி
            வடித்து வனப்பிரீஇ முடித்ததன் பின்னர்த்
 
                (விரிசிகையைப் புனைதல்)
                6 - 14 : வேரி..............பின்னர்
 
(பொழிப்புரை) வெட்டிவேரும், தகரமும், சந்தனம், அகில், கருப்பூரம், கத்தூரி, குங்குமம் என்னும் இவ்வைந்துவகை விரையும் தேய்த்துக் கடல் போன்ற பெரிய வாவியின் நறிய நீரால் விருப்பமுண்டாக ஆட்டிச் சிம்பு இல்லாமல் திரண்டு தூறலும் இலவாய் நெய்யில் தோய்த்தெடுத்தாற் போன்ற நிறத்தினை உடையவாகிக் கருமையினாலே அழகுற்றுப் பருமையில்லாத சிலவாகப் பகுக்கப்படும் அவள் கூந்தலை மெல்ல வாரிக் கைசெய்து காட்டின் கண்ணதாகிய காழ்ப்புடைய அகிலைத் தேனில் தோய்த்துத் தீயிலிட்டு எழுப்பிய நறிய குளிர்ந்த கொடிபோலெழாநின்ற நறுமணப் புகையை அளவறிந்து ஊட்டிக் கைசெய்து அழகுற முடித்ததன் பின்னர் என்க.
 
(விளக்கம்) வேரி - வெட்டிவேர். தகரம் - ஒருவகை மணப் பொருள். விரை : சந்தனம், அகில், கருப்பூரம், கத்தூரி, குங்குமம் இவ்வைந்துமாம். உரிஞ்சி - தேய்த்து. ஆர்கலி - கடல். கடல்போன்ற பெரிய நீர்நிலையின் நீர் என்க. அல்லது பேராரவாரமுடைய நீர் எனினுமாம். துய் - சிம்பு. அஃதாவது கூந்தல் நுனி பிளவுபட்டுச் சுருண்டிருத்தல் என்க. தூறல் - பாரிக்கிடத்தல். தேனெய் : இருபெயரொட்டு. தேனாகிய நெய் என்க. கொடிப்புகை - கொடிபோலப் படர்ந்தெழும் புகை. வடித்தல் - சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டிக் கூந்தலை அகமும் புறமும் ஆராய்தல். வனப்பு இரீஇ - அழகைச் செய் முறையால் ஆக்கி வைத்து என்க.