பக்கம் எண் :

பக்கம் எண்:882

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
           உடைந்துவே யுகுத்த வொண்முத் தொருகாழ்
         அடைந்துவில் லிமைப்ப வணிபெறப் பூட்டிக்
         கல்லுண் கலிங்க நீக்கிக் காவலன்
         இல்லின் மகளி ரேந்துவன ரீத்த
   35    கோடி நுண்டுகில் கோல மாக
         அவ்வரி யரவின் பையெனப் பரந்த
         செல்வ வல்குற் றீட்டிவைத் ததுபோல்
         வல்லிதின் வகைபெற வுடீஇப் பல்லோர்
 
                    (இதுவுமது)
           31 - 38 : உடைந்து..................உடீஇ
 
(பொழிப்புரை) மேலும் மூங்கில் உடைந்து சிந்திய ஒளிமுத்துக்களால் கோவை செய்யப்பட்ட ஒற்றைவடம் அவள் கழுத்தினையடைந்து இறுமாப்புற்று ஒளி வீசும்படி அழகுறப் பூட்டிக் காவிக்கற் குழம்பு தோய்த்த அவளது ஆடையை அகற்றி உதயண மன்னனுடைய அரண்மனை மகளிர் ஏந்திக் கொணர்ந்து வழங்கிய புதிய நுண்ணிய ஆடையை அழகாக, அழகிய வரிகளையுடைய பாம்பினது படத்தினை ஒத்த பரந்த இன்பமிக்க அல்குலின்மேல் ஓவியம் தீட்டிவைத்தாற் போலக் கைவன்மையால் ஒழுங்குபட உடுத்தி என்க.
 
(விளக்கம்) கல் - காவிக்கல். காவிக் குழம்பில் தோய்த்த துகில் என்க. காவலன் : உதயணன். கோடி நுண்டுகில் - புதிய நுண்ணிய ஆடை. அவ்வரி - அழகிய வரி. அரவின் பை - அரவின் படம். செல்வம் - ஈண்டு இன்பம். உடீஇ - உடுத்து.null