பக்கம் எண் :

பக்கம் எண்:883

உரை
 
4. வத்தவ காண்டம்
 
16. விரிசிகை போத்தரவு
 
           வல்லிதின் வகைபெற வுடீஇப் பல்லோர்
           காணச் சேற லாற்றா மகட்கு
  40       நாணுத் தரீகந் தாங்கிக் கையுளோர்
           நீணீர் நறுமலர் நெரித்துக் கொடுத்து
           மலரினும் புகையினு மாத்தொழில் கழிப்பி
 
                 (இதுவுமது)
        38 - 42 : பல்லோர்...................கழிப்பி
 
(பொழிப்புரை) மாந்தர் பலரும் தன்னைக் காணும்படி இயங்குதல் ஆற்றாத பெரு நாணுடைய அத்துறவி மகளுக்கு நாணுத்தரீகம் என்ற மேலாடையை இட்டு அதனை அவள் ஒரு கையால் தாங்க வைத்து மற்றொரு கையின்கண் நீரில் நின்று நீண்ட நறிய குவளை நாள் அரும்பினைக் கையால் நெரித்துக் கொடுத்துப் பின்னர் மலர்களாலும் புகையாலும் செய்யும் ஒப்பனைத் தொழில்களைச் செய்து முடித்து என்க.
 
(விளக்கம்) பல்லோர் காணச் செல்லுதல் இயலாத பெருநாணுடைய மகள் என்க. உத்தரீகம் - மேலாடை. மகளிர்க்கு நாணம் மிகுங்கால் முக முதலியவற்றை மறைத்துக் கொள்ளுதற்குக் கருவியாதலால் அதனை நாணுத்தரீகம் என்றார். மகளிர் குவளை மலரைக் கையிற் கொள்ளுதல் இயல்பு. இதனை, "கையது தாது மல்கிய தண்கழுநீர் மலர்" (3. 5 : 87 - 8;) எனவும் "கையிற் புள்ளாவிச் செங்கழுநீர்க் குவளை செய்தாள் புனை பூணாள்" (சீவக. 1323) எனவும் வருதல் காண்க.