பக்கம் எண் :

பக்கம் எண்:885

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
          விடுத்தனர் போகி விரிசிகை தன்றமர்
          அடுத்த காதற் றந்தைக் கிசைப்ப
          மாதவன் கேட்டுத்தன் காதலி தனைக்கூஉய்
          வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் பெருமாற்
   5      கடுத்தனெ னங்கையை நின்னை யானும்
          விடுத்தனென் போகி வியனுல கேத்த
          வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக்
          கேட்டவள் கலுழ வேட்கையி னீக்கிக்
          காசறு கடவுட் படிவங் கொண்டாங்
   10     காசறச் சென்றபின் மாசறு திருநுதல்
 
          (விரிசிகையின் தந்தை தவம் புரியச் செல்லல்)
                1 - 10 : விடுத்தனர்..........பின்
 
(பொழிப்புரை) இங்ஙனம் விரிசிகை மாதரைக் காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி விடுத்த அவள் சுற்றத்தார் அவளுக்கு உற்ற அன்புடைத் தந்தையாகிய அம் முனிவனுக்கு அந்நிகழ்ச்சியைக் கூறாநிற்ப, அது கேட்ட அம் முனிவன் மகிழ்ந்து தன் காதலியாகிய நீலகேசியை அழைத்து, "நங்காய்! நம் மகளைக் குற்றமற்ற பெரும் புகழையுடைய வத்தவர் பெருமானுக்கு வாழ்க்கைத் துணைவியாக வழங்கினேன். இனி யான் உன்னை நீங்கித் தனித்துச் சென்று இப் பேருலகம் வணங்கிப் புகழும்படி குற்றம் தீர்தற்குக் காரணமான பெரிய தவத்தை மேற்கொள்வேன் காண்" என்று கூற அதுகேட்ட அப் பத்தினி பிரிவாற்றாமையால் பெரிதும் வருந்தி அழாநிற்ப, அவளை அம் முனிவன் தனது அறிவுரையால் அத் துன்பத்திற்குக் காரணமான வேட்கையினின்றும் விடுவித்துத் தேற்றிக் குற்றமற்ற துறவோர் வேடம்தாங்கித் தனது பிறப்பறும் பொருட்டுத் தவத்தின்மேற் சென்ற பின்பு என்க.
 
(விளக்கம்) தந்தை : விரிசிகை தந்தை. அம் மாதவன் என்க. காதலி : நீலகேசி. வடு - பழி. கலுழ - அழ. காசு - குற்றம். கடவுட் படிவம் - துறவோர் வேடம். ஆசு - அழுக்கு. ஈண்டு அவா. அதன் காரியமாகிய பிறப்பின்மேனின்றது.