பக்கம் எண் :

பக்கம் எண்:902

உரை
 
4. வத்தவ காண்டம்
 
17. விரிசிகை வதுவை
 
            வேட்டவட் புணர்ந்து வியனுல கேத்த
     115     அன்புநெகிழ்ந் தணைஇ யின்சுவை யமிழ்தம்
            பனியிருங் கங்குலும் பகலு மெல்லாம்
            முனிவில னுகர்ந்து முறைமுறை பிழையாது
            துனியும் புலவியு மூடலுந் தோற்றிக்
            கனிபடு காமங் கலந்த களிப்பொடு
     120     நற்றுணை மகளிர் நால்வரும் வழிபட
            இழுமென் செல்வமொ டின்னுயி ரோம்பி
            ஒழுகுவனன் மாதோ வுதயண னினிதென்.
 
                     (இதுவுமது)
          114 - 122 : வியனுலகு..........இனிதென்
 
(பொழிப்புரை) அகன்ற இந்நில உலகம் புகழ்ந்து பாராட்டக் குளிர்ந்த கரிய இரவும் பகலும் ஆகிய எப்பொழுதும் வெறானாய் அன்பால் உளம் நெகிழ்ந்து அத் தேவியோடு கூடி இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற காமவின்பம் கூட்டுண்டு முறை முறையே தப்பின்றித் துனியும் புலவியும் ஊடலும் தோற்றிக் கற்பகக் கனி போன்ற காமவின்பங் கலந்த மகிழ்ச்சியோடே தனக்கு வாழ்க்கைத் துணைவியர் ஆகிய வாசவதத்தையையுள்ளிட்ட நால்வரும் தன்னை வழிபடா நிற்ப, 'இழும்' என்னும் அமைதி இன்பத்தோடு உலகில் வாழும் இனிய உயிர்கள் பலவற்றையும் பாதுகாத்து அம்மன்னர் பெருமான் இனிதே ஒழுகி வாராநின்றான் என்க,
 
(விளக்கம்) வியன் - அகலம். உளம் நெகிழ்ந்து என்க. அமிழ்தம் போன்ற காமவின்பம் என்க. முனிவிலன் - வெறானாய். துனி - முதிர்ந்த பிணக்கு. புலவி - சிறுபிணக்கு. பதனறிந்து நுகர்தலுண்மையின் கனிபடு காமம் என்றார். துணை - வாழ்க்கைத்துணை. அமைதியான செல்வம் என்பார் இழுமென் செல்வம் என்றார். உதயணன் இனிது ஒழுகுவனன் என மாறுக.

                     17. விரிசிகை வதுவை முற்றிற்று.