பக்கம் எண் :

பக்கம் எண்:911

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           முடிவுநனி கேட்டலு முன்னோற் கமைந்த
           கழிபெருங் காதலி மறுமொழி யெதுவெனச்
     35    சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறல
           உற்றவ ருரைத்தவை யொக்கு மவனொடு
           சென்றோ ரொருவருஞ் சிதைகலத் துய்ந்து
           வந்தோ ரில்லை மாந்தளிர் மேனிக்குக்
           கருவு முண்டே திருவமர் மார்ப
     40    தெய்வம்........................................
           ..................படுத்த மாற்றமுந் தெளியாள்
           ஐயத் துள்ளமொ டதுவும் படாளென
           இருவர் மாற்றமுந் தெரிகவென் றேவலின்
 
                  (இதுவுமது)
            33 - 43 : முடிவு.........ஏவலின்
 
(பொழிப்புரை) அவ்வழக்கினைக் கூறிமுடித்த முடிவினை உன்னிப்பாய்க் கேட்ட மன்னவன், ''வணிகீர்! அம்முதல்வனுக்கு அமைந்த மிக்க காதலையுடைய மனைவி கூறும் மறுமொழி யாது ? கூறுக!'' என்று பணித்தலும் அவர் சுற்றத்தார் மன்னனுக்குக் கூறுபவர் ''பெருமானே! அவட்குச் சுற்றத்தார் கூறும் செய்திகள் மாறுபாடுடையன வல்லவாய் ஒக்குமாயினும் அவனோடு அம்மரக்கலத்திலே சென்றோருள் வைத்து ஒருவரேனும் சிதைந்து அக்கலத்தினின்றும் பிழைத்துவந்து அவன் கருத்து இன்னது என்று கூறினாருமில்லை. மேலும் மாந்தளிர் போன்ற மேனியையுடைய அவ்விளமகள் வயிற்றில் கருவும் உளதென்று அறிகின்றேம். திருமகள் விரும்புதற்குக் காரணமான மார்பினையுடையோய் ! தெய்வம்..............................தோற்றிய மொழியையும் தெளியாதவளாய், அவன் இறந்தான் என்பதின்கண் ஐயுற்ற நெஞ்சினையுடையளாய் அதனினும் படாள்'' என்று கூறிய அந்த இருவர் மாற்றத்தையுங்கேட்டு உருமண்ணுவாவை நோக்கி, ''ஐய ! நீ இதனை ஆராய்ந்து தெளிக!'' என்று பணித்தலாலே என்க.
 
(விளக்கம்) சுற்றமாந்தர் - அவள் சுற்றத்தாராகிய வணிகர், உரைத்தவை மாறலவாய் ஒக்கும் ஆயினும் என மாறிக்கூட்டி ஒருசொல் பெய்து கொள்க. மாந்தளிர் மேனி : அன்மொழி. ஈண்டுச் சுட்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது. அவள் நிலைமைக்கு இரங்குவார் இங்ஙனம் கூறினர். 40ஆம் அடியின் இறுதிச்சீர் மூன்றும் 41ஆம் அடியின் முதற்சீரும் அழிந்தன. ஆதலால் பொருள் தொடர்பும் அற்றது.