பக்கம் எண் :

பக்கம் எண்:912

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           உருமண் ணுவாவதற் குறுவழக் குரைத்தனன்
     45    வருக வப்பொருள் வந்தபி னவ்வழி
           இருவரு மிலைச்சித் தீரறு திங்கட்
           கொருவன் கையகத் திருக்க விருந்தபின்
           மிக்கோண் மாற்ற மெய்யெனின் மேலை
           இயல்பே யாகு மதுதா னன்றி
     50    மறுவில் கொள்கையோர் சிறுவனைப் பெறினே
           உறுபொருண் மற்றிவ ருரைக்கவும் பெறாஅர்
           வெண்குடை நிழற்றிய வேந்தே பெண்பெறிற்
           புறநடை யொழித்திவர் திறவதி னெய்துப
           நூனெறி யிதுவென நுழைந்தவ னுரைத்தலும்
     55    ஆனா வலரவ ரகத்திறத் தடைதர
 
              (உருமண்ணுவா வழக்குத் தீர்த்தல்)
              44 - 55 : உருமண்ணுவா.........அடைதர
 
(பொழிப்புரை) அக்கட்டளை பெற்ற உருமண்ணுவா அவ்வழக்கிற்குப் பொருந்திய தீர்வு கூறினன், 'கொற்றவெண் குடையால் மண்ணெலாம் நிழல் செய்த வேந்தே! யான் கட்டளையின்படி இவ் வழக்கிற்குத் தீர்வு கூறுவல். கேட்டருளுக ! கடலுள் மூழ்கிய அவ்வணிகனுடைய பொருளனைத்தும் முன்னர் நம்முன் வருவனவாக ! அங்ஙனம் வந்தபின் அவற்றை யாம் கணித்தறிந்தபின் அவற்றைப் பொதியாக்கி அவன் தம்பியராகிய அவ்விருவரும் நங்கண்முன் அவற்றிற்குத் தத்தம் இலச்சினையைப் பொறிப்பாராக! அங்ஙனம் பொறித்த பின்னர் அவை இவ்விருவருள் முதல்வன் கையகத்தில் ஓரியாண்டு இருப்பனவாக! அங்ஙனம் இருந்தபின்னர் இறந்துபட்ட அம்முன்னோனுடைய மனைவியாகிய கற்புமிக்க அம்மடந்தையின் மொழி மெய்யாதல் காணின் அப்பொருள்கள் முன்போலவே அம்முன்னோனுக்கே உரியனவாகும். அஃதே அறமுமாம். அங்ஙனமின்றி அவன் இறந்துபட்டது உண்மையாயினும் அவள் இப்பொழுது கருவுற்றிருத்தலால் அவள் குற்றமற்ற கொள்கையையுடைய ஓர் ஆண் மகனைப் பெற்றால் அப்பொருள் அவனுக்கே உரியதாம். பின்னர் இவ்வணிகர் தாமும் மிக்க அப்பொருளைப்பற்றி இங்ஙனம் வழக்குரைக்கவும் இடம் பெறார். பெருமானே! அவள் பெண்மகவு பெற்றால் அம்மகவினை வளர்த்தல், கற்பித்தல,் அணிதல், மணம் புரிவித்தல் முதலிய புறத் தொழில்களாகிய உலகநடையைச் செய்து முடித்த பின்னர் அவள் பொருட்டுச் செலவாகிய பொருள் போக எஞ்சிய பொருளை இவ்விரு வணிகரும் பாக முறைப்படி அடைவார்கள். இத்தீர்வே அறநூல் வழியாம்' என்று அவ்வழக்கினுள் மனம் செலுத்தி அவ்வமைச்சன் தீர்வு கூறலும் அதுகாறும் வழக்கொழிதலில்லாத அவ்விரு வணிகரும் இத்தீர்வினை ஏற்றுக் கொண்டு அவரவர் இல்லத்திற்குச் சென்ற பின்னர் என்க.
 
(விளக்கம்) தீர்வு கூறுபவன் அவ்வணிகர் கேட்ப அரசனை நோக்கிக் கூறியபடியாம். உருமண்ணுவா பின்வருமாறு உரைத்தனன் என்க. வருக வப்பொருள் என்றது அப்பொருளை நங்கண்முன் கொணருக என்றவாறு. அவ்வழி - நாம் கணித்துக் கண்டபின் என்பதுபட நின்றது. இருவரும் - எஞ்சிய தம்பிமார் இருவரும். இலைச்சித்து - இலச்சினை பொறித்து. ஈரறுதிங்கள் - ஓரியாண்டு. பொருள் வயிற்பிரிவு ஓரியாண்டை எல்லையாக உடையதாகலின் ஈரறுதிங்கள் ஒருவன் கையகத்து இருக்க என்றான். அஃதாவது முன்னோன் கடலுள் மூழ்கி இறந்ததனை அவன் மனைவி மெய்யென்று ஒப்புக் கொள்ளாமையால் அவள் ஐயத்திற்கேற்ப அவன் ஒரோவழி உயிரோடிருப்பின் ஓரியாண்டிற்குள் மீண்டுவருவன் ஆதலின் அதுகாறும் பொறுத்திருந்து பார்த்திடுக என்றவாறு.

        'பொருள்வயிற் பிரிவும் யாண்டின தகமே
         ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும்'    (தொ. கற்பி - 48 - 9)


எனவரும் நூற்பாக்களானும் உணர்க. மிக்கோள்மாற்றம் மெய்யெனின்  என்றது அவன்மனைவி தன்கணவன் இறந்திலன், அங்ஙனங் கூறுவது பொய் என்று கூறும் மொழி மெய்ம்மையாயின் என்றவாறு. இதனால் 40 - 41 ஆம் அடிகளில் அழிந்து போன சொற்கள் இக்கருத்துடைய அவள் கூற்றாதல் கூடும் என்று ஊகிக்கலாம். மெய்யெனின் என்றது அவன் உயிருடன் இருந்து மீள்வானாயின் என்பது கருத்து. மேலை இயல்பேயாகும் என்றது வரின் முன்பு போலவே அப்பொருள் அவனுக்குரிய தன்மையுடைத்து என்றவாறு. அது - மெய்யென்றல். மறுவில் கொள்கைச் சிறுவன் என்றது தந்தைபொருள் மைந்தற்குரியது என்னும் குற்றமற்ற கொள்கைக்குக் காரணமான சிறுவன் என்றவாறு. உறுபொருள் - மிக்க பொருள். உரைக்கவும் - வழக்குரைக்கவும். பெறார் என்றது இடம்பெறார் என்பதுபட நின்றது. புறநடை - புறமாகப் பெண்ணிற்குச் சுற்றத்தார் செய்யும் செயல்கள். அவை உரைக்கிடையிற் காண்க. திறவதின் - பாக முறைப்படி. வழக்கு ஆனா அவர் என்க.