பக்கம் எண் :

பக்கம் எண்:913

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           அவையம் போக்கி நவையறு நெஞ்சினன்
           மக்க ளின்றெனின் மிக்குயர் சிறப்பின்
           என்குல மிடையறு மெனநினைந் தாற்றான்
           கொற்றத் தேவியைக் குறுகலு மவளும்
 
             (உதயணன் மகப்பேறு விரும்பல்)
             56 - 59 : அவையம்...........குறுகலும்
 
(பொழிப்புரை) அற்றைநாள் அரசவையைக் கலைத்தபின்னர்க் குற்றமற்ற நெஞ்சினையுடைய உதயணமன்னன் நிகழ்ந்த அவ்வழக்குக் காரணமாக 'அந்தோ ! எனக்கு மக்கள் பிறவாராயின் அரசர் குலத்தில் வைத்து மிகமிக உயர்ந்த சிறப்பினையுடையதாய் வாராநின்ற எனது குருகுலம் இடையறவு பட்டழியுமே' என்று நினைந்து அதனாலுற்ற துன்பத்தினை ஆற்றானாய் வெற்றிப்பாடமைந்த வாசவதத்தையின் மாளிகையை அடையாநிற்ப என்க.
 
(விளக்கம்) அவையம் - அரசவை. நவை - குற்றம். என்குலம் - எனது குருகுலம். அந்நினைவால் உண்டான துன்பத்திற்கு ஆற்றானாய் என்றவாறு. முதற்றேவி என்பது தோன்ற கொற்றத்தேவி என்றார்; என்றது வாசவதத்தையை.