பக்கம் எண் :

பக்கம் எண்:915

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          விரிகொடிப் பவழத்தின் விரிந்த சேவடிக்
          காழகிற் புகைநிறங் கடுக்குந் தூவிப்
          பல்சிறைப் புறவம் பரிந்துட னாடி
          அவ்வாய்க் கொண்ட வாரிரை யமிழ்தம்
     70   செவ்வாய்ப் பார்ப்பிற்குச் சேர்ந்தவண் சொரிதலின்
          உறுபசி வருத்தமு மன்பினது பெருமையும்
          திறவதி னோக்கித் தெரியா நின்றுழி
 
                 (இதுவுமது)
             66 - 72 : விரி........நின்றுழி
 
(பொழிப்புரை) விரிந்துபடரும் பவழக்கொடிகள் போன்று விரிந்த சிவந்த கால்களையும் காழ்ப்புடைய அகிலினது புகை நிறத்தை ஒக்கும் தூவிகளையும் பலவாகிய சிறகுகளையும் உடைய புறாக்கள் அன்புகூர்ந்து ஆணும் பெண்ணுமாய் ஒருங்கு சேர்ந்து ஆராய்ந்து தம் வாயில் பற்றிக் கொணர்ந்த கிடைத்தற்கரிய இரையாகிய இனிய உணவினைத் தங்களுடைய சிவந்த வாயினையுடைய குஞ்சுகளிருக்கும் இடத்தைச் சேர்ந்து அவற்றின் வாயில் சொரிதலாலே உயிரினங்களுக்கு மிக்க பசியால் வருகின்ற துன்பத்தையும், தாய்மை அன்பின் பெருமையையும் அவற்றின்பால் கூர்ந்துநோக்கி அதுபற்றித் தன் நெஞ்சினுள்ளே ஆராயுங்கால் என்க.
 
(விளக்கம்) புறாவின் விரல்களையுடைய கால்களுக்குப் பவழக்கொடி உவமை. அகிற்புகை புறாவின் தூவிக்கு உவமை. 'அந்நெ ருப்பினில் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா' (கலிங்கத் - 69) என வரும் கலிங்கத்துப்பரணியும் காண்க. பரிந்து - வருந்தி எனினுமாம். அவ்வாய் - அழகிய வாய். அமிழ்தம் - உணவு. உறுபசி - மிக்கபசி. அன்பு - தாயன்பு.