பக்கம் எண் :

பக்கம் எண்:921

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          கொடிக்கோ சம்பி குறுகித் தமரிடை
          முடிக்கல மெல்லா முறைமையி னோக்கிக்
    105    கைவினைக் கம்மத்துக் கதிர்ப்புநனி புகழ்ந்து
          வேண்டுக விதுவென விளங்கிழைக் கோமகட்
          கீயக் கொண்டுதன் னிடைமுலைச் சேர்த்தலும்
          காய்கதிர்க் கனலியிற் கதுமெனப் போழ்ந்து
          புக்கது வீழ்தலும் பொருக்கென வெரீஇ
    110    எழுந்த மாதரொ டிறைவனு மேற்றுக்
 
                    (இதுவுமது)
             103 - 110 : கொடிக்.........ஏற்று
 
(பொழிப்புரை) கொடியையுடைய கோசம்பி நகரத்தையணுகித் தன் சுற்றத்தார் சூழலிலே அம்முடிக்கலனின் உறுப்பெல்லாம் முறைமையாகப் பார்த்துக் கைத்தொழிலாற் செய்த அம் முடியினது ஒளியுடைமையை நன்கு புகழ்ந்து உதயணன் 'நங்காய்! இம் முடிக்கலனை நீ விரும்பி ஏற்றுக்கொள்க!' என்று கூறி அவ்விறைமகளுக்கு அதனை வழங்காநிற்ப, அவளும் அதனை விரும்பிக் கைக்கொண்டு தன்முலையின்மேல் சேர்த்தலும் அம் முடிக்கலன் சுடுகின்ற கதிர்களையுடைய ஞாயிற்றுமண்டிலம் போலே ஞெரேலென அவள் மார்பினைப் பிளந்து அவள் வயிற்றினுட் புகுந்து புறப்படுதலாலே கதுமென அஞ்சி அவ் வாசவதத்தை எழாநிற்ப, இங்ஙனம் கனாக்கண்ட உதயணனும் கனவில் எழுந்த வாசவதத்தையின் எழுச்சியோடே அக் கனாக்கலைந்து தானும் துயிலுணர்ந்து என்க.
 
(விளக்கம்) கம்மம் - கம்மத் தொழில். கைவினையாகிய கம்மம் என்க. கம்மத்தாலுண்டாகிய கதிர்ப்பு என்க. கோமகட்கு - வாசவதத்தைக்கு. கனலி - ஞாயிறு. கதுமென, பொருக்கென இரண்டும் விரைவுக் குறிப்பு. வெரீஇ எழுந்த மாதரொடு - தான் கனவின்கண் கண்ட வாசவதத்தை அஞ்சி எழுந்த நிகழ்ச்சியோடு என்க.