பக்கம் எண் :

பக்கம் எண்:923

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          பல்கதிர் மதியமொடு பரந்துவிசும் போடும்
          வியந்த நற்கோ ளுயர்ந்துழி நோக்கிப்
          பெயர்ந்துவரு நாளிற் பெருமையின் வழாத
    125    நன்னா ளமயத்து மின்னென நுடங்கி
          விஞ்சைய ராழி யுருட்டும் வேட்கையொ
 
             (வாசவதத்தையின் கருப்பம்)
          122 - 126 : பல்கதிர்...........வேட்கையொடு
 
(பொழிப்புரை) பலவாகிய கதிர்களையுடைய திங்கட்கோளோடு பரவி வானின்கண் இயங்குகின்ற கணிகளால் வியக்கப்பட்ட பிற நல்ல கோள்கள் உயர்ந்த இடத்தை நோக்கிப் பெயர்ந்து வருகின்ற நாளிலே பெருமையில் வழுவாத நல்ல முழுத்தத்தில் மின்னல்போன்று அசைந்து விச்சாதரர் உலகின்கண் ஆணைச்சக்கர முருட்டுதற்குக் காரணமான விருப்பத்தோடே என்க.
 
(விளக்கம்) மதியம் - திங்கள். நற்கோள் - நற்பண்புடைய கோள்மீன்கள். உயர்ந்துழி - உயர்ந்த இடம், என்றது ஆடு முதலிய இராசிகளுள் வைத்துச் சிறந்த இராசி என்றவாறு. நன்னாள் அமையம் - நல்ல விண்மீன் நிலவிய முழுத்தம்.