பக்கம் எண் :

பக்கம் எண்:924

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
          டஞ்செந் தாமரை யகவயி னிறைந்த
          வெண்பாற் புள்ளின் விழையுந் தன்மையொ
          டவந்தியன் மடமக ளணிவயிற் றங்கண்
    130    வியந்துதலை பனிக்கும் வென்றி வேட்கையொடு
          சேட்படு விசும்பிற் சென்றவ னவ்வழிப்
          பொய்ப்படு குருசில் பொலிவொடு பட்டென
 
                    (இதுவுமது)
          127 - 132 : அஞ்செந்தாமரை......... பட்டென
 
(பொழிப்புரை) அழகிய செந்தாமரை மலரின் அகத்திலே சென்று அடைந்த வெள்ளிய பால்போலும் நிறமுடைய அன்னப்புள்போல விரும்பும் தன்மையோடு பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தையின் அழகிய வயிற்றின்கண் பிறர்கேட்டுத் தலையை நடுக்கும் வெற்றிக்குக் காரணமான விருப்பத்தோடே சேய்மையுடைய வானத்திலே பறந்து சென்றவன் ஊழ்வினை கூட்டப் போய்ப் புகுகின்றவன் பொலிவோடு தங்கினானாக என்க.
 
(விளக்கம்) ஒரு தேவன் நன்னாளமையத்து மின்னென நுடங்கி வேட்கையோடு விசும்பிற் சென்றவன் மடமகள் வயிற்றங்கண் போய்ப் புக்குப் பொலிவொடு பட்டென என இயைத்துக் கொள்க. அத் தேவனுக்கு அன்னப் பறவையும் வாசவதத்தை வயிற்றிற்குச் செந்தாமரைப் பூவும் உவமைகள். சென்றவனாகிய குருசில் எனக் கூட்டுக. பட்டென - தங்கினானாக.