பக்கம் எண் :

பக்கம் எண்:937

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           ஒழுக்கினுங் கற்பினு மிழுக்க மின்றெனப்
           பசைஇய கேள்வனைப் பைந்தொடி வணங்கி
    230    அசையா வூக்கத் தடிகளென் னுள்ளம்
           விசைகொ ணோன்றாள் விச்சா தரர்போல்
           மிசையே சென்றுற மேன்மே னெருங்கும்
           இசையா வரும்பொரு ளிற்றென வுரைத்தல்
           வசைதீர் வையத்து நகைய தாதலிற்
    235    சொல்லிய திலனென மெல்லியன் மிழற்ற
 
         (வாசவதத்தை தன் விருப்பத்தைக் கூறல்)
            228 - 235 : ஒழுக்கினும்............மிழற்ற
 
(பொழிப்புரை) அதுகேட்ட வாசவதத்தை தனது வயா விருப்பத்தைக் கூறுதலாலே தனதொழுக்கத்திற்காதல் கற்பினுக் காதல் இழுக்குச் சிறிதும் இல்லை என்பதனால் தன்னைப் பெரிதும் விரும்பிய கணவனை வணங்கித் தளராத ஊக்கத்தினையுடைய, 'அடிகேள் ! என்னெஞ்சம் வேகமுடைய வலிய முயற்சியையுடைய விச்சாதரரைப்போலே வானத்தே பறந்து திரிதலை மேலும் மேலும் விரும்பி என்னை வருத்துகின்றது. இசையாத அரிய பொருள் ஒன்றனை இஃது என்று கூறுவது குற்றமற்ற இவ்வுலகத்தே நகைப்பைத் தருவதொன்றாகலான் யான் இதுகாறும் இதனைச் சொல்லவில்லை' என்று மெல்லியல் புடைய அந்நங்கை மிழற்றாநிற்ப என்க.
 
(விளக்கம்) பசைஇய - அன்புற்ற. பைந்தொடி : வாசவதத்தை. அசையா - தளராத. அடிகள் : விளி. விசை - வேகம். மிசை - வானம். நெருங்கும் - வருத்தும். இசையா அரும்பொருள் - கிட்டாப்பொருள். இற்றென - இஃதென்று. மெல்லியல் : வாசவதத்தை.