பக்கம் எண் :

பக்கம் எண்:938

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
           எளிதெனக் கென்ன வமைச்சரோ டாராய்ந்
           தொளிமலர்க் கோதா யுற்றபி னறியெனத்
           துன்ப நீக்குந் தோழரோ டியைந்தே
           இன்பக் கோட்டியு ளினிதி னிருந்து
    240    பேராக் கழற்காற் பெருந்தகை வேந்தன்
           ஆர்வவேய்த் தோளி யசாநோய் தீரிய
           ஆராய்ந் தனனா லமைச்சரோ டொருங்கென்.
 
           (உதயணன் அமைச்சரோடு ஆராய்தல்)
            236 - 242 : எளிதெனக்.............ஒருங்கென்
 
(பொழிப்புரை) போரின்கண் பிறக்கிடாத வீரக்கழல் கட்டிய காலையுடைய பெருந்தகையாகிய அவ்வேந்தன் வாசவதத்தை மொழிந்ததனைக் கேட்டு 'ஒளியுடைய மலர்மாலை யணிந்த நங்காய்! நீ விரும்புவதனை நிறைவேற்றுதல் எனக்கு எளியதொரு செயலேயாகுங் காண். கவலற்க! யான் அதனைச் செய்து முடித்தபின் அறிந்துகொள்க,' என்று கூறி அவள்பால் நின்றும் சென்று தனக்கு வரும் துன்பங்களைத் துவர நீக்கும் தோழரோடு பொருந்தி இன்புறுதற்குக் காரணமான அக்கூட்டத்தே இனிதாக வீற்றிருந்து தனது ஆர்வத்திற்குக் காரணமான மூங்கில்போலும் தோளையுடைய அவ்வாசவதத்தையின் வயா நோயைத் தீர்த்தற் பொருட்டுத் தன் நல்லமைச்சராகிய அத்தோழரோடு ஒருங்கே ஆராய்வானாயினன் என்க.
 
(விளக்கம்) கோதாய் : விளி. தோழர் - வயந்தகன் முதலியோர். இன்பக்கோட்டி - இன்பத்திற்குக் காரணமான கூட்டம். பேரா - பிறக்கிடாத. தோளி : வாசவதத்தை. தீரிய - தீர்த்தற்கு. வேந்தன் அமைச்சரோடும் ஆராய்ந்தனன் என்க.

                 1. வயாக் கேட்டது முற்றிற்று