பக்கம் எண் :

பக்கம் எண்:941

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
           பொறியுடை மார்பவது புணர்க்கும் வாயில்
           அறிவல் யானஃ தருளிக் கேண்மதி
     10    வெற்றத் தானையும் வேழமு நீக்கி
           உற்றோர் சிலரோ டொருநா ளிடைவிட்டு
           வேட்டம் போகி வேட்டுநீர் பெறாஅ
           வெம்பர லழுவத் தெம்பரு மின்மையின்
           மதிமயக்கெய்திப் புதுமலர்க் காட்டுட்
 
        (உருமண்ணுவா பழைய இயக்க நண்பனைப்பற்றிக் கூறுதல்)
                8 - 14 : பொறியுடை...........எய்தி
 
(பொழிப்புரை) அது கேட்ட அவ் வமைச்சன், 'சிறந்த இலக்கணவரிகள் அமைந்த மார்பினையுடையோய் ! அத்தேவி விரும்பிய பொருளை நுகர்விக்கும் வழியை யான் அறிகுவேன். அதனைக் கூறுவேன் கேட்டருள்க ! முன்பு ஒருகாலத்தே யாம் ஆட்சித்தொழிலை இடையில் விட்டு ஒரு நாள் வெற்றிப் படைகளையும் யானைகளையும் அகற்றி வேட்டைக்குப் பொருந்திய ஒரு சிலரோடு காட்டகத்தே வேட்டமாடச் சென்று அக் காட்டின்கண் நீர்வேட்கை மிக்கு அதனைப்பொறாமல் வெவ்விய பருக்கைக்கற்கள் நிரம்பிய அந்நிலப் பரப்பின்கண் பருகும் நீர் எவ்விடத்தும் இல்லாமையால் அறிவு மயக்கமடைந்து' என்க.
 
(விளக்கம்) பொறி - சிறந்த இலக்கணமாகிய சிறந்த மூன்று கோடுகள். இதனை, 'மார்பில் செம்பொறி வாங்கிய மொய்ம்பின் எனவும் (முருகு. 104 - 105) 'பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன்' (சீவக. 1706) எனவும் வருவனவற்றாலறிக. திருமகளுமாம். வெற்றத்தானை - வெற்றியையுடைய படை. உற்றோர் - வேட்டைத் தொழிலுக்குப் பொருந்தியவர். ஆட்சியின்கண் இடைவிட்டு என்க. வேட்டம் - வேட்டை. வேட்டு - விரும்பி. அழுவம் - பரப்பு. எம்பரும் - எவ்விடத்தும்.