பக்கம் எண் :

பக்கம் எண்:965

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
         
     95    வேழ நினைஇ வேட்கை மீதூர்ந்
           தூழ்வினை வகையி னுடம்பிட் டேகி
           நன்றியில் விலங்கின் பிறவி நயந்துநீ
           கானஞ் செய்தது காரண மாக
           மலைக்கணத் தன்ன மாசில் யானையுள்
     100    இலக்கண மமைந்ததோ ரிளம்பிடியாகிப்
           பிறந்த பின்றைச் சிறந்துநீ நயந்த
           வேக யானையொடு விழைந்துவிளை யாடிப்
           போக நுகர்கெனப் போற்றா னாகிச்
           சாவ மற்றவ னிடுதலுஞ் சார்ந்து
 
                    (இதுவுமது)
           95 - 104 : வேழம்...............இடுதலும்
 
(பொழிப்புரை) "ஆயின் நீ யானையை நினைந்து காமவேட்கை மிகவும் பெருகி நன்மையில்லாத அவ் விலங்கின் பிறப்பைப் பெரிதும் விரும்பி அக் கருத்துத் தோன்ற என் முன்னிலையில் பண்ணிசைத்தது காரணமாக இனி நீ நினது ஊழ்வினையின்படியே இவ்வுடலினை விட்டுச்சென்று மலைக் கூட்டம் போன்ற குற்றமற்ற அந்த யானைக் கூட்டத்தினுள் வைத்து நல்லிலக்கணம் பொருந்திய ஓர் இளம் பிடியானையாகிப் பிறந்த பின்னர் வளர்ந்து பருவத்தாற் சிறந்து நீ இப்பொழுது விரும்பிய சினமிக்க அக்களிற்றியானையோடு விரும்பி விளையாடி இன்பம் நுகர்வாயாக' என்று அக் குபேரன் அவள் பிழையைப் பொறானாய்ச் சபித்தலாலே என்க.
 
(விளக்கம்) நினைஇ - நினைத்து. மீதூர்ந்து - பெருகி. உனது ஊழ்வினையும் அங்ஙன மிருந்தது என்பான் ஊழ்வினை வகையின் ஏகி என்றான். நன்றி - நன்மை. கானம் - பண். மலைக்கணத்தன்ன - மலைக் கூட்டங்களையொத்த. பருவத்தாற் சிறந்து என்க. வேக யானை - வெகுளிமிக்க யானை. போகம் - இன்பம். போற்றானாகி - பிழை பொறானாய். சாவம் - சாபம்.