பக்கம் எண் :

பக்கம் எண்:967

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          அண்ண னற்றா ளவந்தியர் கோமான்
          பண்ணமை வாரியுட் பண்ணுப் பிடியாப்
    110    பற்றப் படுதி பட்ட பின்னாள்
          அலகை யாகிய வைம்பெருங் குலத்துக்
          கொலைகெழு செவ்வேற் குருகுலக் குருசில்
          உலகம் புகழு முதயண குமரனைப்
          பிறைமருப் பியானைப் பிரச்சோ தனன்றமர்
    115    சிறைகொளப் பட்டுச் செல்லா நின்றுழி
 
                   (சாப விடை)
           108 - 115 : அண்ணல்............நின்றுழி
 
(பொழிப்புரை) அது கேட்ட அக் குபேரன் இரங்கி, ''ஏடி! இதுகேள், நீ பெருமையினையும் நல்ல முயற்சியினையுமுடைய அவந்தி நாட்டரசனாகிய பிரச்சோதனனுடைய ஒப்பனையமைந்த யானைக் கூடத்தின்கண் ஒப்பனை செய்யப்படும் ஒரு பிடியானையாக அம் மன்னன் மறவரால் கைப்பற்றப் படுவாய். அங்ஙனம் கைப்பற்றிய பின்னர் உயர் குலத்திற்கு எல்லையாயமைந்த ஐம்பெரும் மன்னர் குலத்துள் வைத்துக் கொலைத்தொழில் பொருந்திய சிவந்த வேலையுடைய குருகுலத்துள் தோன்றிய தலைவனாகிய சான்றோர் புகழும் உதயண குமரன் பிறை போன்ற மருப்பினையுடைய யானைப் படையையுடைய அப் பிரச்சோதன மன்னனுடைய மறவரால் சிறை செய்யப்பட்ட காலத்தே'' என்க.
 
(விளக்கம்) அண்ணல் - பெருமை, தாள் - முயற்சி. வாரி - யானைக் கூடம். அலகை - எல்லை. ஐம்பெரும் குலம் - இக்குவாகு குலம், அரிகுலம், குருகுலம், நாதகுலம், உக்கிரகுலம் என்பன. தமர் - ஈண்டு மறவர்.