பக்கம் எண் :

பக்கம் எண்:968

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          மண்ணமை நெடுந்தோண் மறமாச் சேனற்குப்
          பண்ணமை பிடியாய் நீயு மவற்றுள்
          யானை வித்தகர் தானத்தின் வடிப்ப
          நடையொடு நவின்ற காலை யவ்வழிப்
    120    படையுடை வேந்தன் பனிநீர் விழவினுட்
          குடைகெழு வேந்தன் குருகுலக் குருசில்
          ஒண்ணுறுந் தெரிய லுதயண னேறப்
          பண்ணிச் செல்க பத்திரா பதியென
 
                  (இதுவுமது)
             116 - 123 : மண்............என
 
(பொழிப்புரை) நில உலகத்தைத் தாங்கும் நெடிய தோளையுடைய மறமாச்சேனன் என்னும் பிரச்சோதன மன்னனுக்கு ஊர்தியாய்ப் பண்ணுறுத்தப்பட்ட பிடி யானையாய் அவ்வியானைக் குழுவினுள் நின்னை யானை வலவர் அக் கூடத்தின்கண் சிறப்பாகப் பழக்குதலாலே நீ சிறந்த நடையோடு பழகி வருங்காலத்தே அவ் விடத்தே படையையுடைய பிரச்சோதன மன்னன் ஆங்கு நிகழும் குளிர்ந்த நீர்விழவின்கண் கொற்ற வெண்குடை பொருந்திய வேந்தனாகிய குருகுலத்தோன்றலாகிய ஒள்ளிய நறிய மலர் மாலை யணிந்த உதயணன் ஏறுதற்பொருட்டு ''என் பத்திராபதி ஒப்பனை செய்யப்பட்டு அவன்பால் செல்வதாக !'' என்று கட்டளை யிடுதலாலே என்க.
 
(விளக்கம்) மண் - உலகம். மறமாச்சேனன் - பிரச்சோதனன். யானை வித்தகர் - யானை பழக்குந் தொழிலில் சதுரப்பாடுடைய பாகர்கள். தானத்தில் - யானைக் கூட்டத்தின்கண். வடிப்ப - பழக்க, வேந்தன்: பிரச்சோதனன்.