பக்கம் எண் :

பக்கம் எண்:975

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          சொரிதரு விசும்பிற் சோதமற் குறுகிப்
    170    பாத்தில் பெருமைப் பரதன் முதலாச்
          சேய்த்தின் வந்தநின் குலமுஞ் செப்பமும்
          வைத்த காட்சியும் வல்லிதிற் கூறிச்
          சிதைவில் செந்நெறி சேர்ந்துபின் றிரியா
          உதையண குமரற் குவகையிற் றோன்றுமோர்
    175    சிறுவன் வேண்டுமது சிறந்ததென் றேத்தப்
 
        (குபேரன் சௌதருமேந்திரன்பால் சென்று ஏத்தல்)
                 169 - 175 : சொரி........ஏத்த
 
(பொழிப்புரை) பின்னர் அக் குபேரன் உலகிற்கு மழை நீரைப் பெய்து புரக்கின்ற விண்ணுலகின்கண் சென்று ஆங்கு அவ்வுலகினை ஆளும் சௌதருமேந்திரனை அணுகி ''ஐய ! பிறரும் பகுத்துக் கோடற்கிடமில்லாத தனிப் பெருமையையுடைய பரத சக்கரவர்த்தி முதலாக நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்த உன்னுடைய குலச் சிறப்பினையும், அதன் நடு நிலைமையையும் அஃது உலகின்கண் நிறுத்திவைத்த நல்லறிவினையும் வன்மையுற உலகிற்கு உணர்த்தித் தானும் சிதைவில்லாத அந்தச் செவ்விய நெறியிலே சேர்ந் தொழுகிப் பின்னர் ஒருபொழுதும் பிறழ்தலில்லாத உதயண மன்னனுக்கு மகிழ்ச்சியோடே இப்பொழுது ஒரு மகன் பிறத்தல் வேண்டும். அங்ஙனம் பிறப்பித்தல் நீ செய்தற்குரிய சிறந்ததொரு செயலாகும்'' என்று பாராட்டிக் கூறாநிற்ப.
 
(விளக்கம்) சோதமன் - சௌதருமேந்திரன். பாத்தில்பெருமை : அப் பெருமையில் பிறருக்கும் பங்குண்டு என்று பகுத்தல் இல்லாத தனிப் பெருமை என்றவாறு. 'பாத்தில் பழம் பொருள்' (சிலப். 10. 188) என்புழியும் அஃதப்பொருட்டாதல் உணர்க. சௌதருமேந்திரன் பரத சக்கரவர்த்தியின் குலத்திற் பிறந்தவனாதலின் பரதன் முதலாச் சேய்த்தின் வந்த நின்குலம் என்றான். சேய்த்தின் - நெடுங்காலமாக. செப்பம் - நடு நிலைமை. நின்குலத்தோர் உலகத்திற்குக் கற்பித்து வைத்த காட்சியும் என்றவாறு. காட்சி - நல்லறிவு. உலகத்தில் அற முதலிய உறுதிப் பொருள்களைப் பரத சக்கரவர்த்தியின் குலத்தோரே அறிவுறுத்தினர் என்பது பற்றி அவற்றை உதயணன் மேற்கொண்டு பிறழாது ஒழுகுகின்றான் என்று குபேரன் ஈண்டுச் சௌதருமேந்திரனுக்குக் கூறுகின்றான். இஃது அவ்வுதயணனுக்கு மகப்பேறு வழங்குதல் வேண்டும் என்னும் தனது வேண்டுகோளுக்கு ஏதுக் கூறியபடியாம். சிறுவன் - மகன். அது - அங்ஙனம் வழங்குதல் என்க.