பக்கம் எண் :

பக்கம் எண்:981

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
         
    205   ஆயினு மக்குறை முடித்த லாற்றுவென்
          தானவட் டந்தன டளிரிய லாதலின்
          இதுவு நன்னயஞ் சிறிதென வதனைத்
          தான்வெளிப் படாஅ ளின்னு நுனக்கோர்
          வான்வெளிப் படூஉம் வாரி விழுப்பொருள்
    210    தருதல் வேட்கை யொருதலை யுடையள்
 
             (பத்திராபதியின் நன்றி யறிவு)
            205 - 210 : ஆயினும்............உடையள்
 
(பொழிப்புரை) "உதயண ! நிகழ்ச்சி இங்ஙனமாயினும் நீ கூறிய குறையை யானே முடித்துத் தருவல, இம்மகப்பேற்றினை (இங்ஙனமாகலின்) அப்பத்திராபதியே உனக்குத் தந்தனள் என்றுணர்க. இம்மகப்பேறு வழங்கிய செயலும் நீ அவட்குச் செய்த உதவியைக் கருதுமிடத்தே சிறிதாகும் என்று கருதி அதனை யார்க்கும் வெளிப்படுத்திக் கூறாளாய் உனக்கு இன்னும் வானத்தினின்றும் வெளிப்படுவதும் வருவாய் மிக்கதும் சிறந்ததுமாகிய பொருளொன்றனை வழங்குதல் வேண்டும் என்னும் விருப்பத்தை அவள் ஒருதலையாக உடையளாய் இருக்கின்றனள் காண்' என்க.
 
(விளக்கம்) தளிரியலவள்தான் தந்தனள் என மாறுக. இதுவும் - மகப்பேறளித்த உதவியும். சிறிதென - நீ செய்த உதவியைக் கருதுமிடத்துச் சிறிதென்று கருதி என்க. அதனை - தான்செய்த உதவியை. நுனக்கு - உனக்கு. வான் வெளிப்படூஉம் விழுப்பொருள் என்றது - வானத்தே பறக்கும் சிறந்த ஊர்தி என்னும் ஒருபொருளும் தோன்றக் கூறியவாறு. ஒருதலை - உறுதியாக.