பக்கம் எண் :

பக்கம் எண்:985

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          விசும்பின் மின்னென விரைந்தனன் மறைந்தபின்
          பசும்பொற் பைந்தார்ப் பனிமதி வெண்குடை
          ஒன்றிய வொழுக்கி னுதயண மன்னன்
          குன்றகச் சாரற் குளிறுபு வீழ்ந்த
     5    இரும்பிடித் தோற்றமு மிறுதியுங் கேட்டு
          விரும்பிய வுள்ளமொடு விரைந்தன னிருந்தபின்
 
               (உதயணன் செயல்)
          1 - 6 : விசும்பின்............இருந்தபின்
 
(பொழிப்புரை) இங்ஙனம் நஞ்சுகன் வாசவதத்தையின் வயாநோய் தீர்க்கும் வழியை உதயணனுக்குக் கூறி வானின்கண் ஏறி மின்னல் போன்று விரைந்து சென்று மறைந்த பின்னர்ப் பசிய பொன்னாலியன்ற மாலையினையும் குளிர்ந்த நிறைத் திங்கள் போன்ற கொற்ற வெண்குடையினையும் செங்கோன்மைக்குப் பொருந்திய ஒழுக்கத்தினையும் உடைய அவ்வுதயணமன்னன் அவ்வியக்கன் வாயிலாய் மலைகளையுடைய பாலை நிலத்தின்கண் முழங்கி விழுந்த பெரிய பிடியானையினது தோற்ற முதல் சாவு இறுதியாக அமைந்த வரலாற்றினைக் கேட்டு அப் பத்திராபதியை விரைந்து காணுதற்கு விதுப்புறுகின்ற நெஞ்சத்தோடே சிறிது பொழுது இருந்த பின்பு என்க.
 
(விளக்கம்) இயக்கன் மறைந்தபின் என்க. செங்கோன்மைக்கு ஒன்றிய ஒழுக்கம் என்க.