பக்கம் எண் :

பக்கம் எண்:986

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          அருமறை விச்சைப் பெருமறை தொடங்கி
          வடிக்கண் மாதர் வருத்த நோக்கி
          நெடிக்கு மவாவென நெஞ்சி னினைஇ
     10    உள்ளத் தன்னாட் குள்ளழிந் துயிரா
          வள்ளிதழ் நறுந்தார் வத்தவ னுரைப்பத்
 
                    (இதுவுமது)
           7 - 11 : அருமறை............உரைப்ப
 
(பொழிப்புரை) மாவடுவினது பிளவு போன்ற கண்களையுடைய வாசவதத்தையின் வயாத் துன்பத்தையும் நினைந்து அவளது விருப்பம் நிறைவேறுதற்குக் காலம் நீளும் போலும் என்று தன் நெஞ்சில் நினைத்து அந்நெஞ்சத்தின்கண் நிலை பெற்றிருக்கின்ற அவ்வாசவதத்தையின் பொருட்டுத் தனது நெஞ்சழிந்து வெய்தாக உயிர்த்து நஞ்சுகன் தனக்குக் கூறிய பெறற்கரிய மறைமொழியாகிய அந்த வித்தையையுடைய பெரிய மந்திரத்தை ஓதத் தொடங்கிப் பெரிய இதழையுடைய நறிய மலர்மாலையினையுடைய அவ்வத்தவ நாட்டு மன்னன் இடையறாது கணியா நிற்ப என்க.
 
(விளக்கம்) அரிய மறையின் கண்ணதாகிய வித்தையாகிய பெருமறை என்க. வடி - மாவடு. மாதர் : வாசவதத்தை. நெடிக்கும் - நீளும். நினைஇ - நினைந்து. உள்ளத்தன்னாள் - உள்ளத்திலுறையும் அவள். உயிரா - உயிர்த்து. வத்தவன் - உதயணன்.