பக்கம் எண் :

பக்கம் எண்:994

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
          உருமண் ணுவாவுட னேறு மதற்குத்
          தெருமர லெய்திச் செய்திற மறியான்
          என்றுணைக் குற்ற நோயு மிதுவென
    60    வென்றடு தானை வேந்தன் விரும்பித்
          தச்சனை நோக்கி மெச்சுவன னாக
          ஏறுக விருவரு மென்றவ னுரைத்தலின்
          வீறுபெறு விமானத்து விரைந்தவ ரேறலும்
 
                      (இதுவுமது)
             57 - 63 : உருமண்ணுவா.............ஏறலும்
 
(பொழிப்புரை) அப்பொழுது உருமண்ணுவா என்னும் அமைச்சனும் தன் மனைவியும் கருவுற்றிருப்பவள் வயாவினால் அவ்வாசவதத்தை விரும்புவதெல்லாம் விரும்புவதனை உணர்ந்தவனாய் அவள் வயாநோய் தீர்த்தற்பொருட்டுத் தன் மனைவியோடே அவ்வூர்தியின்கண் ஏறுதற்கு நினைப்பவன் அவ்வூர்தியின்கண் ஏறுதல் கூடுமோ? கூடாதோ? என்று மனச் சுழற்சியை யடைந்து யாது செய்வதென்றறியாமல் ஒருவாறு துணிந்து வேந்தனை நோக்கிப் 'பெருமானே ! கருவுற்றிருக்கின்ற என் மனைவிதானும் தேவியார் விரும்புவதனையே விரும்புகின்றனள்' என்று கூற, அதுகேட்ட பகைவரை நேர்நின்று வென்று கொல்லும் ஆற்றலையுடைய படைகளையுடைய உதயணனும் உருமண்ணுவா மனைவியோடு ஊர்தியில் வருவதனை விரும்பியவனாய் அத் தச்சனை நோக்கித் தன் குறிப்புத் தோன்றப் புகழ்வானாக. அதுகேட்ட அவ்விளந்தச்சன் 'வேந்தே ! அவ்விருவரும் ஏறுவாராக !' என்று கூறுதலாலே வீறுடைய அவ்விமானத்தின்கண் உருமண்ணுவாவும் அவன் மனைவியும் விரைந்து ஏறாநிற்ப என்க.
 
(விளக்கம்) தெருமரல் - சுழற்சி. என்றுணை - என் மனைவி. இது - இவ் விருப்பம். மெச்சுவனன் - புகழ்பவன். அவன் - அவ்விளந் தச்சன். வீறு - வேறொன்றற்குமில்லாத சிறப்பு. அவர் - உருமண்ணுவாவும் அவன் மனைவியும்.